ஜெயலலிதா போல் ஆட்சி செய்வேன்.. அசராமல் சொன்ன சசிகலா! திமுக ஆட்சியில் மனசு நிறையவில்லை என்றும் குட்டு
தூத்துக்குடி: ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தாரோ அதே போல் ஆட்சி செய்வேன் என சசிகலா தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
அதிமுகவை கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்தும் கைகூடாத நிலையில், சசிகலா தமிழ்நாடு முழுவதும் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து அங்குள்ள தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

விரைவில் அரசியல் பயணம்
அப்போது பேசிய அவர், "அரசியல் பயணம் இப்போது தொடங்கும். அதிமுக என்பது எங்களுடைய கட்சி. அதை கைப்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. தொண்டர்கள் அனைவரும் இருக்கிறார்கள். தொண்டர்களில் இருந்துதான் தலைவர்கள் உருவாகிறார்கள். விரைவில் அரசியல் பயணம் தொடங்கும். திராவிட முன்னேற்றக் கழகம் ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்ததாக சொல்கிறார்கள்.

மக்கள் மனம் நிறையவில்லை
ஆனால் மக்கள் மனம் நிறைந்ததாக தெரியவில்லை. சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. மக்கள் கஷ்டப்படுகிறார்கள். மின்சார தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுத்ததாக சொல்கிறார்கள். ஆனால், மின்சாரமே வரவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

மக்கள் திருப்தியாக இல்லை
வீட்டுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறினார்கள். ஓராண்டாகியும் கொடுக்கவில்லை. முதியோர் உதவித் தொகையை திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொடுக்கவில்லை. மொத்தத்தில் மக்கள் மனதில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. நானும் பல இடங்களுக்கு சென்று வந்தேன். மக்கள் என்னிடம் இதைதான் சொல்கிறார்கள். மக்கள் யாரும் திருப்தியாக இல்லை. இதுதான் ஓராண்டு ஆட்சியின் பலனாக இருக்கிறது.

ஜெயலலிதாபோல் ஆட்சி செய்வேன்
நிச்சயமாக ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தாரே அதேபோன்று ஆட்சி செய்வேன். குறிப்பாக சட்டம் ஒழுங்கு மிகவும் சீரழிந்துள்ளது. சென்னை போன்ற இடங்களில் செயின் பறிப்பு அதிகரித்து இருக்கிறது. பெண்கள் 9 மணிக்கு மேல் வெளியில் செல்லவே கஷ்டப்படுகின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது எங்கள் கட்சிக்காரர்கள்கூட காவல் நிலையத்துக்கு செல்ல முடியாது. அந்த அளவுக்கு கட்டுப்பாட்டோடு வைத்திருந்தார்கள்.

காவல் நிலையத்தில் திமுகவினர்
இப்போது திமுக ஆட்சியில் கரைவேட்டி கட்டியவர்கள்தான் காவல் நிலையத்தில் அதிகம் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்கள் சுதந்திரமாக இருக்க முடியும். நான் நிறைய கிராமங்களுக்கு சென்று வந்தேன். அங்கு சிறிய கடைகளை நடத்தி வியாபாரிகளிடம் மாதம் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இதெல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் இல்லை.

மாமூல் கேட்கும் திமுகவினர்
சிறிய பூக்கடை, பழக்கடை வைத்திருந்தால் கூட திமுகவினர் மாதா மாதம் பணம் கேட்டு மிரட்டுவதாக சொல்கிறார்கள். சென்னைக்கு அருகே நிறுவனங்கள் அதிகம் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் நடப்பதை பலர் என்னிடம் நேரடியாக சொல்கின்றனர். மாதம் ரூ.10,000 வேண்டும் என திமுகவினர் கேட்பதாக சிறிய வியாபாரி சொல்கிறார். அதற்கு மறுத்ததால் நிறுவனத்துக்கு வழங்கும் மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.

முதலமைச்சர் கவனத்துக்கு செல்கிறதா?
திமுகவினர் சொல்வதை கேட்டு செய்யும் அதிகாரிகளும் இருக்கின்றனர். 4-5 நாட்கள் மின்சாரம் இல்லாததால் ரூ.10,000 கொடுத்தவுடன் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் முதலமைச்சரின் கவனத்துக்கு செல்கிறதா என்று தெரியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது கோரிக்கை.












Click it and Unblock the Notifications