சவான் மாத முதல் திங்கட்கிழமை... உஜ்ஜையினி சிவ ஆலயத்தில் குவிந்த விஐபிக்கள் - பெண் பக்தர்கள் காயம்
உஜ்ஜையினி மகாகாலேஸ்வரர் ஆலயத்தில் திங்கட்கிழமையன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்களும் குழந்தைகளும் படுகாயமடைந்தனர்.
உஜ்ஜையினி: சவான் புனித மாதத்தின் முதன் திங்கட்கிழமையன்று உஜ்ஜையினி மகாகாலேஸ்வரர் ஆலயத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி ஏராளமானோர் குவிந்தனர். மாநில முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட விஐபிக்கள் சாமி தரிசனம் செய்ய வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கியதில் பெண்களும், குழந்தைகளும் படுகாயமடைந்தனர்.
சிவனுக்கு உகந்த நாளாக திங்கள் கிழமை கடைபிடிக்கப்படுகிறது. சிவன் பக்தர்கள் திங்கள் கிழமை அன்று விரதம் இருப்பதை கடைபிடித்து வருகின்றனர். தமிழகத்தில் ஆடி மாதம் போல வட இந்தியாவில் சவான் மாதம் புனிதமாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் திங்கட்கிழமை சிறப்பான நாளாக வணங்கப்படுகிறது.

சவான் கா சோம்வர் என்ற நோன்பை ஒரு மாதம் வட இந்திய மக்கள் கடைபிடிக்கின்றனர். சவான் மாத நோன்பு ஜூலை 25ஆம் தேதி தொடங்கியது. சவான் மாதத்தின் முதல் திங்கட்கிழமையான நேற்று வட இந்தியாவில் உள்ள அனைத்து சிவ ஆலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைனில் உள்ள மகாகலேஷ்வர் கோயில் உள்ளது. சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் உஜ்ஜைனின் மகாகலேஷ்வர் கோயில் ஒன்றாகும்.
இந்த ஆலயத்தில் திங்கட்கிழமையான நேற்று கொரோனா விதிமுறைகளை மீறி ஏராளமானோர் திரண்டனர். மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முன்னாள் முதல்வர் உமா பாரதி உள்ளிட்ட வி.ஐ.பிக்கள் பலரும் கோயிலுக்கு வருகை தந்ததால் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது.
ஏராளமானோர் முந்திக்கொண்டு சாமி தரிசனம் செய்யச் சென்றனர். இதில் கூட்ட நெரிசல் அதிகரித்தது. ஒருவருக்கொருவர் தள்ளியதில் பலர் கீழே விழுந்தனர். இதில் பெண்களும், குழந்தைகளும் படுகாயமடைந்தனர்.
கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பலர் முந்திச்சென்றதால் தடுப்புகள் உடைந்தன. பாதுகாப்பு காவலர்களால் மக்களை தடுக்க முடியாமல் திணறினர். வரிசையில் நிற்காமல் ஒருவரை ஒருவர் முந்திச்சென்றதே பலரும் கீழே விழுந்து காயமடைய காரணமாகி விட்டதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications