பழைய வண்டிகள்.. "ரோட்டுக்கு வந்துடுவோம்".. வாகன வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்: சிஐடியு
சென்னை: சாலை வாகனங்களுக்கான வரி உயர்வைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுகுறித்த வேண்டுகோள்களும், தமிழக அரசுக்கு தொடர்ந்து விடுக்கப்பட்டு வருவதால், பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் சாலை வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது.. அதுபோலவே, சரக்கு வாகனங்களுக்கு சுமைக்கு ஏற்ப வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோலவே, இறக்குமதி வாகனங்களுக்கும், பழைய வாகனங்களுக்கும் வரி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது..

அதாவது, வாடகை பயணிகள் போக்குவரத்து வாகனங்களில், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி ரூ.4,900-ஆகவும், 35 பேருக்கு மேல் பயணித்தால் இருக்கைக்கு ரூ.3 ஆயிரமும், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் வரி உயர்கிறது. சென்னை, மதுரை, கோவை நகர சுற்றுப்பகுதிகளில் இயக்க அனுமதிக்கப்பட்ட பிரத்யேக பேருந்துகளுக்கு மேல்வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பயணிகள் போக்குவரத்து, வாடகை வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6,000 வரை பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரி உயா்த்தப்படுகிறது.
வாழ்நாள் வரி: புதிய பைக்குகளுக்கான வாழ்நாள் வரி, ரூ.1 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால் 12 சதவீதமும், பழைய பைக்குகளுக்கு, ஒருவருட பழையது எனில் ரூ.1 லட்சம் வரை விலைக்கு 8.25 சதவீதமும், அதற்கு மேல் 10.25 சதவீதமும், 2 ஆண்டு வரை பழையதாக இருந்தால் ரூ.1 லட்சத்துக்கு 8 சதவீதம், அதற்கு மேல் 10 சதவீதம் என வரி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, 15 ஆண்டுகள் நிறைவடையாத இருசக்கர வாகனங்களுக்கு, 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750, மற்ற மோட்டாா் வாகனங்களுக்கு ரூ.1,500 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி இருசக்கர வாகனங்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்களுக்கு ரூ.2,250, மற்ற வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி உயர்வானது, வாகன ஓட்டிகளுக்கு பெருத்த அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது. வாகனங்களுக்கான இந்த வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் கிளம்பி உள்ளன. அந்தவகையில, தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) இதுகுறித்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
போக்குவரத்துத் துறை அமைச்சர், செயலர் மற்றும் ஆணையருக்கு, சிஐடியு தலைவர் கே.ஆறுமுகநயினார், பொதுச் செயலாளர் வி.குப்புசாமி ஆகியோர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
கடிதம்: அக்கடிதத்தில், "சாலையில் இயங்கக்கூடிய இருசக்கர வாகனம்முதல் 20 சக்கர வாகனங்கள்வரையிலான பல்வேறு வகைவாகனங்களுக்கும், கட்டுமானதளவாட வாகனங்களுக்கும் மோட்டார் வாகனப் பதிவு வரி,சாலை வரி, பசுமை வரி, சாலை பாதுகாப்பு வரி போன்றவற்றை 40 சதவீதத்துக்கு மேலாக உயர்த்தி தமிழக அரசு கடந்த7-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
ஏற்கெனவே 2014-ம் ஆண்டு முதல் புதிய மோட்டார் வாகனசட்டங்களை மத்திய அரசுஒன்றன்பின் ஒன்றாக அமல்படுத்தி, அதற்கேற்ப எரி பொருள்விலை, உதிரிப்பாக விலை, இன்சூரன்ஸ், சுங்கவரி என அனைத்தையும் உயர்த்தியது.
வரி உயர்வு: இந்நிலையில் தமிழக அரசும் தன் பங்குக்கு வாகன வரிகளை நியாயமின்றி உயர்த்தியுள்ளது. மக்களிடம் தமிழக அரசுக்கு உள்ள ஆதரவான சூழலை இந்த வரி உயர்வு எதிராகத் திருப்பிவிடும். எனவே, தமிழக அரசு வாகன வரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். இதை மேலும் தாமதப்படுத்தினால் ஒட்டுமொத்த போக்குவரத்துத் துறையினரும் சாலைக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
வாகனங்களுக்கான வரி உயர்வுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்துள்ளதால், தமிழக அரசு இதுகுறித்து விரைவி பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications