எடப்பாடி பழனிசாமி கொடுத்த தைரியம்! அப்பு செய்த காரியம்! காட்பாடியில் அரசியல் கலாட்டா!
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் புதிதாக சீரமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை அதிமுக மாநகர் மாவட்டத் தலைவர் அப்பு ரிப்பன் வெட்டி திறந்து வைத்த நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக எம்.பி.கதிர் ஆனந்தின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணியை நீங்கள் எப்படி திறந்து வைக்க முடியும் எனக் கேட்டு நூற்றுகணக்கான திமுகவினர் அங்கு குவிந்தனர்.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் அதிமுகவினரும், திமுகவினரும் மோதிக்கொள்ளும் சூழல் உருவானது.

காட்பாடி அப்பு
காட்பாடி அப்புவை தெரியாத அதிமுக காரர்களே தமிழகத்தில் இருக்க முடியாது. ஏனெனில் கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது அமைச்சர்துரைமுருகனை பலமுறை தண்ணீர் குடிக்க வைத்தவர். சொற்ப ஓட்டுக்களில் தான் தனது வெற்றியை துரைமுருகனிடம் பறிகொடுத்தார் இந்த அப்பு. அதுவும் தபால் ஓட்டுக்களால் தான் துரைமுருகன் ஒரு வழியாக கரையேறினார். இல்லையென்றால் இந்நேரம் நடந்திருப்பது வேறாக இருந்திருக்கும்.

எடப்பாடி பாராட்டு
துரைமுருகனுக்கே டஃப் கொடுக்கிறார் என்றால் அது யாராக இருக்கும் என அப்புவை பற்றி அதிமுககாரர்கள் அலசி ஆராய்ந்து அறிந்துகொண்டனர். எடப்பாடி பழனிசாமியுமே கூட அப்புவை அழைத்து அவரது களப்பணியை குறிப்பிட்டு பாராட்டினார். இந்தச் சூழலில் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக உள்ள அப்பு, இப்போது துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை எதிர்த்து வேலூரில் அரசியல் செய்து வருகிறார். திமுக பொதுச்செயலாளர் தரப்புடன் அப்பு இந்தளவு நேரடியாக மோதுகிறார் என்றால் அதன் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி கொடுத்த தைரியமே காரணமாக கூறப்படுகிறது.

ரயில்வே மேம்பாலம்
காட்பாடியின் பிரதான இடங்களில் ஒன்றான ரயில்வே மேம்பாலத்தை அதிமுக மாநகர் மாவட்ட தலைவர் அப்பு ரிப்பன் வெட்டி திறந்து வைத்த நிலையில், நீ எப்படி எங்க எம்.பி. நிதியில் சீரமைக்கப்பட்ட பாலத்தை திறக்கலாம் என திமுகவினர் ரவுண்டு கட்டிவிட்டனர். பதிலுக்கு அதிமுகவினரும் அங்கு திரண்டதால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் சமரசம் செய்து இரு தரப்பையும் கலைந்து செல்ல வைத்தனர்.

கதிர் ஆனந்த்
இதனிடையே சின்னத்தம்பி படத்தில் எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம் என்றுக் கூறிக்கொண்டு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தாலியை கையில் வைத்துக்கொண்டு சுற்றியதை போல், காட்பாடியில் ஒருவர் எப்போதும் ரிப்பனை கையில் வைத்துக்கொண்டு சுற்றுவதாக சினிமா காட்சியை உதாரணமாக கூறி அப்புவை சூசகமாக தாக்கி விமர்சித்துள்ளார் கதிர் ஆனந்த்.












Click it and Unblock the Notifications