மகன் கதிர் ஆனந்த் கொடுத்த சர்ப்ரைஸ்! வான வேடிக்கையுடன் வரவேற்பு! திக்குமுக்காடிய துரைமுருகன்!
வேலூர்: திமுக பொதுச்செயலாளராக 2-வது முறை பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக காட்பாடி சென்ற அமைச்சர் துரைமுருகனுக்கு, வான வேடிக்கையுடன் கூடிய வரவேற்பை தந்து அசத்தியிருக்கிறார் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி.
கரகாட்டம், புலியாட்டம், பூரண கும்ப மரியாதை என வரவேற்பு ஏற்பாடுகள் தடபுடலாக இருந்ததால் காட்பாடி நகரமே களைக்கட்டி காணப்பட்டது.
காட்பாடி ஒன்றிய சேர்மன் வேல்முருகன் வெள்ளி செங்கோல் ஒன்றை துரைமுருகனுக்கு பரிசாக கொடுத்து அவரை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துவிட்டார்.

திமுக பொதுக்குழு
திமுகவின் 15-வது பொதுக்குழு தேர்தலில் அமைச்சர் துரைமுருகன் 2வது முறையாக அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக தனது சொந்த ஊரான காட்பாடிக்கு சென்றிருக்கிறார். சென்னையிலிருந்து ரயில் மூலம் காட்பாடி சென்ற துரைமுருகனுக்கு அங்கு அவரது மகனும் வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்த் மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து தந்தையை நெகிழ வைத்துவிட்டார். கரகாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம், மேளதாளம், வான வேடிக்கை என காட்பாடி நகரை விழாக்கோலம் பூண வைத்துவிட்டார் கதிர் ஆனந்த்.

வெள்ளி செங்கோல்
காட்பாடி ரயில் நிலையத்தில் கட்சியினர் மாலைகளையும், பொன்னாடைகளையும் அணிவித்து துரைமுருகனை ஊர்வலமாக அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அழைத்துச் சென்றனர். சித்தூர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறிய துரைமுருகன், திமுகவினரின் வாழ்த்து மழையில் நனைந்தார். காட்பாடி ஒன்றியச் சேர்மனும் துரைமுருகனின் தீவிர ஆதரவாளருமான தொழிலதிபர் வேல்முருகன் வெள்ளி செங்கோல் ஒன்றை துரைமுருகனுக்கு பரிசாக கொடுத்து அவரை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துவிட்டார்.

சொந்த ஊரில்
தமிழகம் முழுவதும் இருந்தும் பொதுச்செயலாளர் என்ற முறையில் தன்னை சென்னையில் சந்தித்து திமுகவினர் வாழ்த்துச் சொன்னாலும் கூட, தமது சொந்த ஊரில் இப்படியொரு வரவேற்பும், வாழ்த்தும் கிடைத்ததை எண்ணி துரைமுருகன் ரொம்பவே நெகிழ்ந்து போயிருக்கிறார். அரக்கோணம் தொகுதி எம்.பியும் துரைமுருகனின் நண்பருமான ஜெகத்ரட்சகன் இந்த நிகழ்வில் பங்கேற்றதோடு கதிர் ஆனந்தின் நடவடிக்கைகளை பாராட்டிவிட்டு சென்றிருக்கிறார்.

முதல் முறையாக
பொதுவாகவே திமுகவை பொறுத்தவரை பொதுச்செயலாளரை காட்டிலும் தலைவருக்கு தான் வெள்ளி செங்கோல்கள், வீரவாள்கள், உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை கட்சி நிர்வாகிகள் தருவார்கள். ஆனால் முதல் முறையாக காட்பாடியில் துரைமுருகனுக்கு வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications