முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகள் சேர அழைப்பு.. என்னென்ன நன்மைகள்.. கலெக்டர் தகவல்
வேலூர்: விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஊதியத்திற்கோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என்று வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். உறுப்பினர்களாக இணைந்தால் பல்வேறு சலுகைகளை அரசு தருகிறது. அதனை பற்றியும் பார்ப்போம்.
வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "வேலூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண நிதி உதவி, விபத்து நிவாரணம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக 4 லட்சத்து 26 ஆயிரத்து 993 பேரும், அவர்களை சார்ந்தவர்கள் 3 லட்சத்து 569 பேர் என மொத்தம் 7 லட்சத்து 27 ஆயிரத்து 561 பேர் உள்ளனர். முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் விவரம் வருமாறு:-
2.50 ஏக்கருக்கு மேற்படாத நஞ்செய் நிலத்தை அல்லது 5 ஏக்கருக்கு மேற்படாத புஞ்செய் நிலத்தினை சொந்தமாக வைத்திருந்து மற்றும் அந்த நிலத்தில் நேரடியாக பயிர்செய்யும் 18 முதல் 65 வயது வரை அனைத்து குறு மற்றும் சிறு விவசாயிகள்.
உறுப்பினராக பதிவு செய்வது எப்படி: விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஊதியத்திற்கோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள். இந்த 2 வகைகளை சேர்ந்தவர்கள் உறுப்பினராக பதிவுபெற தகுதியுடையவர்கள்.
மேலும் அவர்களை சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்களும் இந்த திட்டத்தின் கீழ் உறுப்பினராக பதிவு செய்ய தகுதி உள்ளது. இந்த திட்டங்களின் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் தாலுகாவில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications