நான் யூடியூப் வீடியோவில் அதிகமாக என்ன பார்ப்பேன் தெரியுமா.. அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு தகவல்
வேலூர்: நான் யூடியூபில் அதிகமாக எந்த வீடியோவை பார்ப்பேன் தெரியுமா என அமைச்சர் துரைமுருகன் ஒரு சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் உள்ள பீஞ்சமந்தை கிராமத்தில் புதிய சாலையை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில் கதிர் ஆனந்தை எப்படி வளர்த்தேனா அதைவிட அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமாரை அதிகமாக அரசியலில் வளர்த்துவிட்டேன். அவருடைய அரசியல் பணிகளை ஒரு குருவாக பார்த்து சபாஷ் என கைதட்டி பெருமையடைந்திருக்கிறேன்.
வெள்ளைக்காரன் காலம் தொடங்கி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலம் வரை வராத சாலையை ஸ்டாலின் காலத்தில் கொண்டு வந்துவிட்டார். எனவே நந்தகுமார் மகா கெட்டிக்காரன். மலைவாழ் மக்களுக்கு தேவையானது எல்லாம் இரண்டு தான், ஒன்று ரோடு, மற்றொன்று அரிசி. இவற்றை தவிர மற்றதை அவர்களாகவே பார்த்துக் கொள்வார்கள்.
நான் யூடியூபில் மலைவாழ் மக்கள் குறித்த வீடியோக்களை அதிகம் பார்ப்பேன். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் திம்மம், சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் எப்படி வாழ்கிறார்கள் எப்படி சமைக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது எனக்கு அப்படியே ஆச்சரியமாக இருக்கும்.

அந்த மக்களின் வாழ்க்கை என்பது மிருகங்களோடு மிருகமாக இருந்து வருகிறது. அவர்களுக்கு நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களை நாம் காப்பாற்ற வேண்டும். வனத்துறையில் வாழும் மக்களிடம் வனத்துறை அதிகாரிகள் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள்.
மலைக்கு ரோடு வந்துவிட்டது. நான் சென்னைக்கு போய் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை சந்தித்து மினி பஸ் விடுவதற்கு ஏற்பாடு செய்கிறேன். மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. பீஞ்சமந்தை மலை கிராமத்தில் விரைவில் மினி பேருந்து இயக்கவும் செல்போன் டவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பாலாம்பட்டு மற்றும் ஜார்தான் கொல்லை ஆகிய ஊராட்சிகளைச் சார்ந்த 794 பயனாளிகளுக்கு 10.3 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications