டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்... அமைச்சர் துரைமுருகன் தகவல்..!
வேலூர்: தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர் இதனைக் கூறினார்.

மேலும், இப்போது நகரத்தில் இருக்கும் கட்சியினர் கிராமங்களுக்கு சென்று உழைத்தால் தான், எதிர்வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலின் போது கிராமத்திலிருக்கும் கட்சியினர் நகர்ப்புறங்களுக்கு வந்து உழைப்பார்கள் எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய அவர், தாம் அமைச்சராக இருந்தாலும் கூட தன்னால் செய்ய இயலாததை கிராம ஊராட்சித் தலைவர்கள் செய்யலாம் என்றும் கிராமத்தில் ஆக வேண்டிய பணிகளை பார்ப்பவர்கள் கவுன்சிலர்களும், ஊராட்சி மன்றத் தலைவர்களும் தான் எனவும் பெருமிதம் தெரிவித்தார். எனவே கிராமங்களில் சரியான நபர்கள் பொறுப்பில் இருந்தால் தான் அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடையும் என அவர் கூறினார்.
காட்பாடி தொகுதியில் இதுவரை ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரிக் கூட இல்லாமல் இருந்த நிலையில் இப்போது அதனை தாம் கொண்டு வந்துள்ளதாகவும் காட்பாடி தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் துரைமுருகன் உறுதியளித்தார்.
மேலும், தன்னை எப்படி ஆதரித்து வெற்றிபெற வைத்தீர்களோ அதே போல் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட துரைமுருகன், வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அனைவரும் தமது போர்வாளாக இருக்கக்கூடியவர்கள் என பெருமிதம் தெரிவித்தார்.
இதனிடையே வரும் டிசம்பர் மாதத்துக்குள் நகராட்சி, மாநகராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தி நகர்மன்றத் தலைவர், மேயர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனக் கூறினார்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை போல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கும் உச்சநீதிமன்றம் கால அவகாசம் கொடுக்காது எனத் தெரிவதால் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் , விரைவில் தேர்தல் பணிகளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications