வேலூர் 'விக்' மோகனிடம் அவ்வளவும் தங்கம்.. 50 வீடுகள்.. 'சில்வண்டு' சிக்கியது எப்படி?
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதிகளில் வழுக்கை தலையுடன் உள்ள காடை மோகன் வீடுகளில் திருடச் செல்லும்போது தலையில் 'விக்' வைத்து செல்வாராம். இதனால் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உருவம் பதிவானாலும் அவர் யார் என்று தெரியாது. இப்படிப்படட் பலே கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் அடிக்கடி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இந்த விவாகரத்தில் போலீசாரால் திருடன் யார் என்பதை யூகிக்கவே முடியவில்லை.. சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் திருடனை பிடிக்க முடியாத நிலையே இருந்தது.. இதையடுத்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அதன்படி குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி, ஏட்டுக்கள் மோசஸ், ரவிக்குமார் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் நேற்று குடியாத்தம் அடுத்த கார்த்திகேயபுரம் பேருந்து நிலையம் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்பதற்காக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக மொபட்டில் வந்தவரை நிறுத்தி விசாரணை செய்தபோது அந்த மொபட் புவனேஸ்வரிபேட்டையில் சில தினங்களுக்கு முன்பு திருடப்பட்டது என்பதை கண்டுபிடித்தனர். அதை ஓட்டி வந்த நபர் பிரபல திருடன் காடைமோகன் என்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து காடைமோகனை போலீசார் கைது செய்தனர்.
காடைமோகன் குறித்து குடியாத்தம் போலீசார் கூறுகையில், குடியாத்தம் நெல்லூர்பேட்டை வீரராகவன் தெரு சேகர் என்பவரின் மகன் மோகன் என்ற காடைமோகன் (வயது 37). இவர் 50-க்கும் மேற்பட்ட வீடு புகுந்து திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றுள்ளார். 3 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர். 10 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் வ.உ.சி. தெருவில் உள்ள சிவன் கோவிலில் காவலாளியை கொலை செய்த வழக்கிலும் தண்டனை பெற்றுள்ளார்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு கைதான காடை மோகன், வேலூர் குடியாத்தம் சென்றாம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளி முதல்வர் வீட்டில் வீடு புகுந்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கியாஸ் அடுப்பு, டி.வி., டேப்லெட் உள்ளிட்டவையும், பசுமத்தூர் பகுதியில் நவீன்குமார் என்பவர் வீட்டில் தங்கம் வெள்ளி பொருட்கள் திருடியதும், வளத்தூர் பகுதியில் மீனா என்பவர் வீட்டில் தங்கம் வெள்ளி பொருட்களை திருடியிருந்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
அவர் அளித்த தகவலின் பேரில் அவர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் அரை கிலோ வெள்ளி கட்டிகள், 60 கிராம் தங்க நகைகள், டி.வி., டேப்லெட் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தோம். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட காடை மோகனின் கூட்டாளிகளை தேடி வருகிறோம். வழுக்கை தலையுடன் உள்ள காடை மோகன் வீடுகளில் திருடச் செல்லும்போது தலையில் 'விக்' வைத்து சென்று வந்தார். இதனால் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உருவம் பதிவானாலும் அவர் யார் என்று தெரியாமல் இருந்து வந்தது. திருட்டு சம்பவங்களுக்கு பிறகு அவர் விக்கை எடுத்துவிட்டு நடமாடுவதால் காடைமோகனை பிடிப்பதில் சவாலாக இருந்தது .இப்போது வாகன சோதனையில் சிக்கியுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications