சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை.. வேலூர் கோர்ட் பரபர தீர்ப்பு
வேலூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டுள்ளார். போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி கடந்த 2006ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பலகட்டங்களாக விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக தனது மனைவியுடன் ஆஜரானார். அப்போது சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியையும் அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டார். போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவியும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications