பகிரங்க மன்னிப்பு கேளுங்கள் பழனிசாமி.. எடப்பாடிக்கு எதிராக திரண்ட தனியார் ஆம்புலன்ஸ் சங்கம்
வேலூர்: எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக மக்களிடம் உரையாடி வருகிறார். வேலூர் மாவட்டத்தில் அவர் மக்களிடம் பேசிக்கொண்டிருந்த நிகழ்ச்சியில் திடீரென வந்த ஆம்புலன்ஸ் சென்றது. ஆம்புலன்ஸ்க்கு உடனடியாக வழி விடாமல், எடப்பாடி பழனிசாமி ஓட்டுநருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் ஏற்கனவே விளக்கமளித்துள்ள நிலையில், தற்போது தனியார் ஆம்புலன்ஸ் சங்கத்தினர் அவருக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம் என்கிற பெயரில் மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். எடப்பாடி பழனிசாமி மக்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்தது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு மிரட்டல்
பொதுவாக அரசியல் கட்சி கூட்டங்களின் போது ஆம்புலன்ஸ் வந்தால் தொண்டர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடுவார்கள். ஆனால் ஆம்புலன்ஸில் ஆள் இல்லாததால், அது அதிமுக கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி அந்தக் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். அப்போது அவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் பேசியது சர்ச்சையாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்து வருகிறது. இதுகுறித்து அதிமுக தரப்பில், "ஆளில்லா ஆம்புலன்ஸ் வந்ததை பார்த்து தொண்டர்கள் சிலர் உணர்ச்சி வசப்பட்டனர். அதை தனக்கே உரிய முறையில் எடப்பாடியார் அமைதியாகவும், பக்குவமாகவும் நெறிப்படுத்தினார். அவர் பண்பான தலைவர்." என்று விளக்கம் அளித்துள்ளனர்.
108 நிர்வாகம் விளக்கம்
இந்த சம்பவம் தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "வயிற்றுப் போக்கால் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்திரா என்பவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற அழைப்பு வந்தது. அதற்காக ஆம்புலன்ஸ் பள்ளி கொண்டாவில் இருந்து புறப்பட்டது. இடைபட்ட வழியில் அதிமுக கூட்டத்தில் ஆம்புலன்ஸ் சிக்கியுள்ளது.
காவல்துறையினர் கூறிய மாற்றுப்பாதையில் ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. அப்போதும் ஆம்புலன்ஸ் கூட்டத்தில் சிக்கிவிட்டது. ஓட்டுநர் விஷயத்தை எடுத்துக் கூற முயற்சித்தும் அங்கு இருந்தோர் அதை கேட்கவில்லை. இதன் காரணமாக அந்தப் பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தான் நோயாளி இடம் மாற்றம் செய்யப்பட்டார்." என்று கூறியிருந்தனர்.
திரண்ட தனியார் ஆம்புலன்ஸ்
இதுகுறித்து தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தலைவர் பிவின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று இரவு அணைக்கட்டு மருத்துவமனையில் நோயாளியை அழைக்க சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை வழிமறித்து, அவமதித்து அவரை மிரட்டும் வகையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.
நேரம் காலம் பார்க்காமல், மருத்துவ அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பதுதான் எங்களின் பணி. அந்தப் பணியை மதித்து பாராட்டாவிடினும், இப்படி அவமதித்து மிரட்டுவதை ஏற்க முடியாது. உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக பேசியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பழனிசாமி மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவருக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம்." என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications