முதல்வரய்யா இந்தாங்க.. காரை நோக்கி ஓடி வந்த சிறுமி.. கையில் கொடுத்த பரிசால் நெகிழ்ந்த ஸ்டாலின்
முதல்வர் மு.க ஸ்டாலினிடம் பேனா ஒன்றை கொடுத்த சிறுமி அதனை கருணாநிதியின் நினைவிடத்தில் வைக்க கூறியுள்ளார்.
வேலூர்: முதல்வர் மு.க ஸ்டாலின் கள ஆய்வு பணிக்காக வேலூர் மாவட்டத்திற்கு சென்றிருந்த போது அவரை நெகிழ்ச்சியடையச் செய்யும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுமி ஒருவர் காரை நிறுத்தி கொடுத்த பரிசும் அதற்கு அவர் சொன்ன காரணமும் முதல்வர் ஸ்டாலினின் மனதை உருக வைத்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து முதல்வர் ஸ்டாலினுக்கு சமூக வலைத்தளங்களில் பள்ளி சிறுவர்கள், சிறுமிகள் பேசி பல கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அந்த கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்த, நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் தாங்கள் சந்திக்கும் சமூக புறக்கணிப்பு குறித்து மாணவி திவ்யா பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றது. இதையடுத்து நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ப்ரியா, திவ்யா மற்றும் தர்ஷினி ஆகியோரை நேரில் அழைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், அவர்களின் கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார். அவர் சொன்னது போலவே நலத்திட்ட உதவிகளையும் செய்து கொடுத்தார். அந்த சிறுமிகளின் வீட்டிற்கு நேரடியாக சென்று இட்லி நாட்டுக்கோழி குழம்பு ஊற்றி சாப்பிட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் பள்ளி சிறுமி ஒருவர், புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை பார்த்த முதல்வர் தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற போது மாணவி ஆராதனா கடிதம் எழுதியதை சுட்டிக்காட்டி பேசியதுடன் விழா மேடையிலேயே அந்த பள்ளிக்கு 2 கூடுதல் கட்டிடங்கள் கட்ட ரூ.35.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் தற்போது வேலூர் காட்பாடியில் சிறுமி ஒருவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பரிசளித்துள்ளது வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா நினைவிடத்தின் அருகே கடல் பகுதியில் பேனா வடிவ நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வருகின்றது. கருத்துக்கேட்புக் கூட்டத்தின் போது பல்வேறு சலசலப்புகள் எழுந்தன. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் கடலுக்குள் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் வைக்க வேண்டும் என்பதில் திமுகவினரும் ஆளுங்கட்சியும் உறுதியாக உள்ளது.
இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தி வருகிறார்,இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வை முடித்துவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியே வந்தார். அப்போது வேலூர் மாவட்டம் காட்பாடி வஞ்சூர் பகுதியைச் சேர்ந்த யாழினி என்ற 4 ஆம் வகுப்பு மாணவி, வேகமாக முதல்வரின் காரை நோக்கி ஓடி வந்தார். தன் கையில் இருந்த பேனாவை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்தார்.
அப்போது அந்த மாணவியை வாகனத்தின் அருகே அழைத்து பேனாவை வாங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த மாணவியை வாழ்த்தினார். எதற்காக இந்த பேனா என சிறுமியிடம் கேட்டார். அதற்கு அந்த மாணவி இந்த பேனாவை கலைஞர் சமாதியில் வைக்க வேண்டும் என தனது ஆசையை கூறினார்.
இதனைக் கேட்ட முதல்வர் ஸ்டாலின் நெகிழ்சியடைந்தார். உன்னுடைய ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுகிறேன் எனக் கூறி சிறுமியை அனுப்பி வைத்தார். இது குறித்து பேசிய சிறுமி முதல்வரை பார்த்தது எனக்கு மிகவும் மகிச்சியாக இருந்தது, என்னை நன்றாக படிக்கச் சொன்னார், நான் முதல்வரை பார்ப்பேன்னு எதிர்பார்க்கலை எனக் கூறினார். முதல்வர் ஸ்டாலினுக்கு சிறுமி யாழினி பேனா கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.