ஆம்பூரில் கட்டப்படும் மேம்பாலத்தில் திடீரென நடந்த விபத்து.. சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் ஷாக்
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மேம்பாலத்தின் கட்டுமானப் பணியின்போது ஒருபக்க சாரம் இடிந்து விழுந்ததில், அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் நகரப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். ஏனெனில் சென்னை - பெங்களூரு இடையில் நகர பகுதிக்குள் தேசிய நெடுஞ்சாலை செல்லும் ஒரே நகரம் என்றால் அது ஆம்பூர் நகரம். இதனால் ஆம்பூர் நகர பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இது ஒருபுறம் எனில், ஆம்பூரில் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகள் நடந்து உயிரிழப்புகளும் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. ஆம்பூர் நகர பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்க வேண்டும், சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காகவும் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. பொதுமக்களின் கோரிகையை ஏற்று போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ரூ.130 கோடி செலவில் 6 வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் ஆம்பூரில் 2.8 கி.மீ. தொலைவுக்கு 6 வழிச்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளும், 750 மீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தால் ஆம்பூர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என கூறப்படுகிறது. ஆம்பூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு இடையில் மிகவும் நெருக்கமான பகுதியில் கட்டப்பட்டு வரும் இந்த மேம்பால பணிகள் தற்போது 60 விழுக்காடு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில்,நேற்று மாலை மேம்பாலத்தின் ஒருபக்க சாரம் திடீரென இடிந்து விழுந்ததில், அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications