வேலூரில் ஆசை ஆசையாய் வீடு கட்டிய டிரைவர்.. புதிய மின் இணைப்பில் வந்த சிக்கல்.. இறுதியில் சபாஷ்
வேலூர்: வேலூரை அடுத்த செதுவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் இருசப்பன் என்பவர் தனியார் மருத்துவமனையில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அங்கிருந்த அதிகாரியான கிருபாகரன் மின் இணைப்பு வழங்க 3000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
வேலூரை அடுத்த செதுவாலை கிராமத்தைச் சேர்ந்த 67 வயதாகும் இருசப்பன் என்பவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இருசப்பன் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டுள்ளார். அதற்காக வேலூர் விரிஞ்சிபுரம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். மேலும் வீட்டின் அருகே மின்கம்பம் நடுவதற்காக ரூ.27 ஆயிரம் ஆன்லைன் மூலம் செலுத்தியிருக்கிறார்.

ஆனால் மின் இணைப்பு மற்றும் மின்கம்பம் நடும் பணி மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து இருசப்பன், விரிஞ்சிபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை அணுகி விரைவாக மின் இணைப்பு வழங்குமாறு கேட்டுள்ளார். அப்போது அங்கு போர்மேனாக பணியாற்றும் கொணவட்டத்தை சேர்ந்த கிருபாகரன் (50) என்பவர் மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத இருசப்பன் இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் போலீசார் வழங்கி, அதை போர்மேன் கிருபாகரனிடம் கொடுக்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
அதன்படி பணம் தயாராக இருப்பதாக கிருபாகரனிடம், இருசப்பன் கூறினார். உடனே கிருபாகரன் பணத்தை பெற்றுக்கொள்வதற்காக, இருசப்பனை தெள்ளூர் பகுதிக்கு வரும்படி தெரிவித்தாராம்.. அங்கு அவர் கிருபாகரனிடம் பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான போலீசார் கிருபாகரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தார்கள். தொடர்ந்து அவரை விரிஞ்சிபுரம் மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மேன் கைது செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக மின் இணைப்பு வழங்க லஞ்சம் கொடுக்க தேவையில்லை.. ஆனால் சில அதிகாரிகள் லஞ்சம் கேட்பது ஆங்காங்கே நடக்கிறது. ஆன்லைன் பேமெண்ட் தவிர எந்த தொகையும் வழங்க தேவையில்லை.. யாராவது லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். அப்படி புகார் அளித்தால், கண்டிப்பாக அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.. அவரை போன்று லஞ்சம் வாங்குவேரை குறைக்க வேண்டும் என்றால், மக்கள் தாங்களாக முன் வந்து புகார் அளிக்க வேண்டும். அதுதான் ஒரே வழி என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications