வேலூர் அருகே திருமணத்திற்கு வந்த சென்னை நண்பர்கள்.. அதிகாலையிலேயே இப்படியா ஆகணும்
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விஷோர் என்ற இளைஞர், சென்னையில் உள்ள தனியார் செல்போன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவரது உறவினர் மகன் சென்னை பூந்தமல்லியில் இன்ஜினியரிங் படித்து வந்தார். இருவரும் பள்ளிக்கொண்டாவில் நடைபெறும் திருமணத்திற்காக வந்துள்ளனர். அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு நடந்த சம்பவம் உறவினர்களையே அதிர வைத்துள்ளது.
சாலையில் செல்வோர் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்தாலோ அல்லது எதிரே வருபவர் சரியாக இல்லை என்றாலோ சிக்கல் வரும். சென்னையில் இருந்து வேலூர் பள்ளிகொண்டாவிற்கு சென்ற நண்பர்களுக்கு என்ன ஆனது என்பதை பார்ப்போம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் கிராமம் பஜனைகோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவருடைய மகன் கிஷோருக்கு 24 வயது ஆகிறது. சென்னையில் உள்ள தனியார் செல்போன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவரது உறவினர் சென்னை பூந்தமல்லி வடக்குமாளம்பாக்கம் வேளாளர் தெருவை சேர்ந்த கோபிகிருஷ்ணன் மகன் முகுந்த்கிரிஷ் (18). பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
வேலூர் பள்ளிகொண்டாவில் நடைபெறும் திருமணத்திற்காக கிஷோரும், முகுந்த்கிரிஷும் அம்மணாங்குப்பம் கிராமத்திற்கு வந்துள்ளனர். நேற்று அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இந்த வாகனத்தை கிஷோர் ஓட்ட, முகுந்த் கிரிஷ் பின்னால் அமர்ந்து பள்ளிகொண்டா சென்றிருக்கிறார்கள்.
குடியாத்தம் அடுத்த ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பாலத்தின் கைப்பிடிச்சுவரில் மோதி அங்கிருந்து கீழே விழுந்தது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் கிஷோர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. முகுந்த்கிரிஷுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக குடியாத்தம் டிஎஸ்பி ராமச்சந்திரன், டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் பலியான கிஷோரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தார்கள்.
குடியாத்தம் ரயில்வே மேம்பாலத்தை பொறுத்தவரை மிகவும் வளைவாக இருக்கும். இதனால் அங்கு மிகவும் மெதுவாக சென்றால் தான் பிரச்சனை வராது.. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் வேகமாக செல்பவர்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குவது நடக்கிறது. குடியாத்தம் ரயில்வே மேம்பாலத்தின் இரண்டு பக்க கைப்பிடி சுவரை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications