ராத்திரியில் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவி.. குமுறிய குடியாத்தம் சேகர்.. நடந்த பெரிய சம்பவம்
வேலூர்: வீடியோ கால் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை கணவனே வெட்டிய சம்பவம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கணவன் மனைவி இடையே முன்பு பேசிக்கொண்டே இருப்பதால் சண்டை வந்தது. இப்போது பேசாமலேயே இருப்பதால் சண்டை அதிகமாக வருகிறது. கணவன் அல்லது மனைவியிடம் நேரத்தை செலவிடாமல் எந்நேரமும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். இதை ஒரு கடட்த்தில் பொறுத்துக் கொள்ள முடியாத கணவன் அல்லது மனைவி சண்டை போடுகிறார்கள்.

நள்ளிரவிலும் நண்பர்களுடன் வீடியோ காலில் பேசுவது, சாட்டிங் செய்வது, மேசேஜ் அனுப்புவது என்று எந்த நேரமும் அரட்டை அடிப்பதால் தம்பதிகளுக்கு இடையே சந்தேக உணர்வும் ஏற்படுகிறது. சிலர் தவறாக பிரிந்து கொண்டு தாக்கவும் செய்கிறார்கள். அப்படித்தான் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சம்பவம் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனூர் பகுதியைச் சேர்ந்த 41 வயதாகும் சேகர் நெசவுத் தொழிலாளி ஆவார். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். அதில் இரண்டு மகள்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. 3வது மகள் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் ரேவதி ஸ்மார்ட்போனிலேயே மூழ்கி கிடந்தாராம். அதிகப்படியான நேரம் சமூக வலைத்தளங்களில் செலவிட்டு வந்தாராம். இது தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தில் பிரச்சனை வெடித்தது. இதனிடையே நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தால், ஆத்திரமடைந்த சேகர் ரேவதியைக் கண்டித்தாராம். அதனால் சேகர் ரேவதி தம்பதி இடையே கடுமையாக வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில், சேகர் வீட்டிலிருந்த அரிவாள்மனையால் ரேவதியின் வலது கையை ஓங்கி வெட்டியுள்ளார். அப்போது சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், கையில் பலத்த காயமடைந்த ரேவதியை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த குடியாத்தம் நகர போலீசார், சேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். வீடியோ காலில் பேசிய மனைவியின் கையை கணவன் வெட்டிய சம்பவம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications