தாமரையில ஒரு குத்து.. டார்ச்சில ஒரு குத்து.. சூரியனுக்கும் ஒரு குத்து.. வினோத வாக்காளர்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கானை ஊராட்சி ஒன்றியத்தில் வாக்காளர் ஒருவர் அனைத்து சின்னத்திலும் தனது வாக்கை பதிவு செய்த வினோத சம்பவம் நடந்தது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் நடைபெற்றது. பல இடங்களிலும் இன்னமும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சுமார் 70 க்கும் மேற்பட்ட மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
கிணற்றில் தள்ளிவிட்டார்களே... படுபாவிகள்... தோல்வியை ஜீரணிக்க முடியாமல் உருண்டு பிரண்ட வேட்பாளர்..!
சுவாரஸ்ய சம்பவங்கள்
இந்த உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் ஒருவர் பாரபட்சம் இல்லாமல் அனைத்து சின்னங்களிலும் குத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் 13 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் எண்ணப்பட்ட வாக்குகளில்தான் இந்த வினோதம் நடந்தது.
கானை ஊராட்சி
விழுப்புரம் மாவட்டம் கானை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதும் 2 அல்லது 3 வாக்காளர்கள் 4,5 பேருக்கு வாக்குகளை பதிவு செய்திருந்தனர். சிலர் வாக்குச் சீட்டில் உள்ள சின்னத்தை கிழித்துவிட்டு வாக்குப் பெட்டியில் போட்டனர்.
செல்லா வாக்குகள்
இது போன்ற வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் வாக்காளர் ஒருவர் அனைத்துச் சின்னங்களிலும் வாக்களித்துவிட்டு சென்றுள்ளார். இது வடிவேல் பட காமெடியை நினைவுப்படுத்துகிறது. தென்னை மரத்தில் ஒரு குத்து, ஏணியில் ஒரு குத்து என்ற காமெடி போல் இருக்கிறது.
வாக்களிக்க விருப்பமில்லை
அது போல் நெல்லை மாவட்டத்தில் ஊராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளில் ஒருவர் வாக்குச் சீட்டில் ரூ 500 தராததால் யாருக்கும் வாக்களிக்கவில்லை என எழுதியிருந்தார். அது போல் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுக்காவில் போகலூரில் தபால் வாக்குகள் உள்ள பெட்டியின் சாவி தொலைந்துவிட்டது. இதையடுத்து அந்த பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டன.