40க்கு 40னு நினைச்சாங்க.. பாவம் பல பேர் தூக்கம் கெட்டுப் போச்சு.. எடப்பாடி பழனிசாமி பரபர பேச்சு!
விழுப்புரம்: 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 நாங்கள் தான் என நினைத்தவர்களுக்கு இந்த மாநாடு தூக்கத்தை கெடுத்திருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், கட்சிகளின் கூட்டணி விவகார பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. அதிமுகவை பொறுத்தவரை, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த நிலையில், வலுவான கூட்டணியை கட்டமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. லோக்சபா தேர்தலுக்கான சீட் பகிர்வு பேச்சுகளும் அதிமுக சார்பில் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிப்பதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி ஏற்கனவே அறிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதிமுக தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடர்ந்து அங்கம் வகிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி தெரிவித்தார்.
இந்நிலையில், புரட்சி பாரதம் கட்சி சார்பில் நேற்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி மைதானத்தில் மனிதம் காப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் நடைப்பெற்ற இந்த மாநாட்டில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பல்வேறு அரசியல் கட்சிகள் வர உள்ளன. அதில் புரட்சி பாரதம் கட்சி முன்னிலை வகிக்கிறது. இந்த மாநாடு, தேர்தல் கூட்டணிக்கான துவக்கமாக இருக்கிறது. புரட்சி பாரதம் கட்சியின் இந்த மாநாடு பலரது தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. 40க்கு 40 நாங்கள் தான் என நினைத்தவர்களுக்கு இந்த மாநாடு தூக்கத்தை கெடுத்திருக்கிறது.
சாதிக்கும் , மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி அதிமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும். இங்கு யாருக்கும் யாரும் அடிமை அல்ல. உழைப்பாளிகள் ஏற்றம் பெறுவார்கள். அப்படிப்பட்ட கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளோம். திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும் சுயநலவாதிக் கட்சிகள். அவர்கள் அமைப்பது சுயநலம் சார்ந்த கூட்டணி. நமது கூட்டணி பொதுநலக் கூட்டணி.

கடந்த அதிமுக ஆட்சியில் கல்வியில் ஏற்றம் பெற பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள், புத்தகப்பை, மடிக்கணினி, சைக்கிள் உள்ளிட்டவைகளை வழங்கினோம். நான் முதலமைச்சராக இருந்தபோது மழை வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தோம். பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசித்து நடவடிக்கைகள் எடுத்தோம். ஆனால் இந்த அரசு ஒன்றுமே செய்யவில்லை.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று எதிரணியை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஏற்றம் பெற வேண்டும் என்பதே அதிமுகவின், அதிமுக கூட்டணியின் கொள்கை." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications