எனக்கு அமைச்சர் பதவி கொடுக்க சொல்லி ஆளுநர் ரவியை சவுக்கால் அடித்தது உச்சநீதிமன்றம்.. பொன்முடி
விழுப்புரம்: தமக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியை உச்சநீதிமன்றம் சவுக்கால் அடித்ததாக தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் பதவியை உடனடியாக இழந்தார் பொன்முடி.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்தார். இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்தது.

இதனால் பொன்முடியின் எம்.எல்.ஏ. பதவி மீண்டும் கிடைத்தது. மேலும் பொன்முடிக்கு அமைச்சர் பதவி மீண்டும் கொடுக்கப்பட்டது. ஆனால் பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என தமிழ்நாடு ஆளுநர் ரவி மறுத்துவிட்டார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
தமிழ்நாடு அரசும் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ரவிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தமிழ்நாடு ஆளுநர் ரவியை மிக கடுமையாக கண்டித்த உச்சநீதிமன்றம், பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கெடுவும் விதித்தது. இதனால் வேறுவழியே இல்லாமல் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் ஆளுநர் ரவி. பின்னர் தமிழ்நாடு அமைச்சராக பொன்முடிக்கு மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர்.
இந்த விவகாரத்தை லோக்சபா தேர்தல் களத்தில் சுட்டிக்காட்டிப் பேசி வருகிறார் அமைச்சர் பொன்முடி. விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்த அமைச்சர் பொன்முடி, என்னை என்ன என்னவோ செய்ய வேண்டும் என்பதற்காக அமைச்சர் பதவியில் இருந்து கூட கொஞ்ச நாள் நீக்கி வைத்தார்கள். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சவுக்காலேயே அடித்து இந்த ஆளுநரை, ஒழுங்கா இந்த ஆளுக்கு பதவி கொடு என்று சொன்னது. 72 ஆண்டுகால இந்திய வரலாற்றில் ஒரு ஆளுநரை சவுக்கால் அடித்து உச்சநீதிமன்றம் சொன்னது நம்ம கேஸில்தான். இதனால்தான் மீண்டும் அமைச்சராகி இருக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications