கடப்பாரை நான் எடுத்து வரவா? நீ என்ன வேலை செய்ற? அதிகாரியை லெப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் மஸ்தான்!
வருவாய்த் துறை அதிகாரிகளும், ஊழியர்களும் கவனக் குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆய்வுக்கு சென்ற அமைச்சர் மஸ்தான், அலட்சியமாக பணியாற்றிய வருவாய் துறை அதிகாரிகளை லெப்ட் ரைட் வாங்கிவிட்டார்.
''இன்னைக்கு நான் ஆய்வுக்கு வருகிறேன் என்று தெரியுமா தெரியாதா? பிறகு ஏன் இந்த முள்ளை கூட வெட்டி சுத்தம் செய்து வைக்கவில்லை'' என சரமாரியாக அமைச்சர் மஸ்தான் வினவினார்.
மேலும், ''நில அளவீடு தொடர்பான ஆய்வுக்கு அளவீடு டேப்பை எடுத்து வராமல், கடப்பாரை கொண்டு வராமல் எதுக்கு வந்தீங்க என கோபம் கொப்பளிக்க கேட்ட அமைச்சர் மஸ்தான், கடப்பாரையை நான் எடுத்து வரவா? சொல்லுங்க'' என வெளுத்து வாங்கிவிட்டார்.
கப்ர்ஸ்தான் இடம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அனந்தபுரத்தில் இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலமான கப்ர்ஸ்தான் தொடர்பான பிரச்சனை ஒன்று நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு வழங்கக் கோரி ஜமாத் அமைப்பினர் தன்னிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நேற்று ஆய்வுக்குச் சென்றார் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான். அமைச்சர் ஆய்வுக்கு வருகிறார் எனத் தெரிந்தும் அங்கு ஒரு புல் பூண்டை கூட பிடுங்காமல் முட்புதர்களை கூட வெட்டாமல் கவனக் குறைவாக வந்திருந்தனர் வருவாய்த் துறை அதிகாரிகள்.
பொறுமைக்கு எல்லை
முதலில் தனது கோபத்தை வெளிப்படுத்தாமல் பொறுமையாக இருந்த அமைச்சர் மஸ்தான், அரசு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை வாங்கிப் பார்த்தார். பிறகு, நிலத்தை அளக்குமாறு கூறிய அமைச்சர் மஸ்தான், வருவாய் துறை ஊழியர்கள் இங்கும் அங்கும் நடந்ததை கண்டு டென்ஷன் ஆனார். அவர்களை அழைத்து என்ன பிரச்சனை என விசாரித்த போது தான் நிலத்தை அளப்பதற்கான டேப், கல் ஊண்டுவதற்கு தேவையான கடப்பாரை, நூல் என எதையுமே அவர்கள் எடுத்துவரவில்லை என்ற தகவல் தெரிந்தது.
கோபம் கொப்பளிக்க
இதனால் பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், வருவாய் துறை ஊழியர்களை அழைத்து, கடப்பாரை கொண்டு வராமல் எதுக்கு வந்தீங்க, நான் வேண்டுமானால் எடுத்து வரவா, சொல்லுங்க, இன்னைக்கு நான் ஆய்வுக்கு வருகிறேன் என்று தெரியுமா தெரியாதா? பிறகு ஏன் இந்த முள்ளை கூட வெட்டி சுத்தம் செய்து வைக்கவில்லை'' என லெப்ட் ரைட் வாங்கினார். அமைச்சரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய வருவாய் துறை ஊழியர்கள் இனி கவனமுடன் செயல்படுவதாக கூறினர்.
அமைச்சர் மஸ்தான்
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை பொறுத்தவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் , அமைதியானவர் என பெயரெடுத்தவர். ஆனால் அப்படிப்பட்ட நபரே அலட்சியமான அதிகாரிகளால் கோபம் கொண்டிருக்கிறார் என்பது தான் கவனிக்கத்தக்கது.