"ராஷ்டிரா" என்றால் என்ன தெரியுமா? வரலாறு தெரியாத ஆளுநர் ஆர்.என்.ரவி.. பொன்முடி சொன்ன விளக்கம்!
விழுப்புரம்: தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதற்கு இந்திய அரசியலமைப்பிலேயே தமிழ்நாடு என்றே உள்ளதாக அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மகாராஷ்டிராவில் "ராஷ்டிரா" என்றால் நாடு என்பது பொருள் எனவும், வரலாறு தெரியாத ஆளுநர் இப்படியான கருத்துகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பொன்முடி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று பேசிய கருத்துகள் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வேம்பி ஊராட்சிக்குட்பட்ட பூண்டி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ நா. புகழேந்தி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.

இந்திய அரசியலமைப்பு
பின்னர் பணியின்போது உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழ்நாடு என்பது சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கூறப்படும் கருத்து. அது ஒன்றும் புதிதல்ல. இந்தியாவின் அரசியலமைப்பிலேயே தமிழ்நாடு என்றே உள்ளது.

யூனியன் ஆப் ஸ்டேட்
அரசியலமைப்பு சட்டம் உருவாக்கத்தின் போதே கூட்டாட்சியா? அல்லது ஒற்றை ஆட்சியா? எப்படி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற விவாதம் ஏற்பட்டபோது அம்பேத்கர் யூனியன் ஆப் ஸ்டேட் என்று கொண்டு வந்தார். அந்த அடிப்படையில் தான் யூனியன் ஆப் ஸ்டேட் என்பதை கூறுகிறோம். ஸ்டேட் என்றால் நாடு, யூனியன் என்றால் ஒன்றியம். அந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு என்று சொல்கிறோம். அரசியலமைப்பின் படி செயல்படுகிற ஒரு முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் என்பதில் எந்த மாறுபட்ட கருத்துமில்லை.

மகா"ராஷ்டிரா" அர்த்தம்
ஆளுநருக்கு வரலாறு எந்த அளவுக்கு தெரியும் என்று தெரியவில்லை. அவர் பல்வேறு நிகழ்வுகளில் இது போன்று பேசி வருகிறார். மகாராஷ்டிராவில் 'ராஷ்டிரா' என்றால் 'நாடு' என்று அர்த்தம். ஏதோ ஒரு எண்ணத்திற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் ஆளுநர் மாற்றிக்கொள்ள வேண்டும்.

தேசிய கீதத்தில் திராவிடம்
'ஜனகனமன' என்ற தேசிய கீதத்திலேயே திராவிடம்' என்ற சொல் வந்துள்ளது. அந்த அடிப்படையில்தான் தமிழக முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார். ஆளுநரை வேண்டி கேட்டுக்கொள்வது என்னவென்றால் தமிழக அரசு என்ன செய்கிறதோ அதை நியமன பதவியிலுள்ள ஆளுநர் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications