சீண்டிய அண்ணாமலை.. சீறிய பொன்முடி - “இப்டி செய்வார்னு எதிர்பார்க்கல! மோடியிடம் நான் கேட்டது இதுதான்”
விழுப்புரம்: தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்த முதலமைச்சர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தான் பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும், இதனை அண்ணாமலை கொச்சைப் படுத்துவார் என தான் எதிர்பார்க்கவில்லை என அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திலுள்ள ஊராட்சி முகமை அலுவலகத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் மஸ்தான், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திராவிடம் என்ற வார்த்தை 1800 களில் தோன்றியதாக அண்ணாமலை கூறுகிறார். வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வியை உயர்த்துவதற்கு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தான் பிரதமரிடம் வலியுறுத்தினேன்.
பிரதமரிடம் நிதி கேட்கவில்லை.. தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஆதரவுதான் கேட்டோம்.. அமைச்சர் பொன்முடி!
பிரதமரிடம் பேசியது என்ன?
மத்திய அரசு புதிய கல்விகொள்கையை கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு என்று கல்விக் கொள்கை வளர்ப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு குழுவை நியமித்து மாநில கல்விக்கொள்கையை உருவாக்க செயல்பட்டு வருகிறார். அதற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டுமென்றே பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன். தமிழ்நாட்டில் உயர்கல்வி தரத்தை உயர்த்த நான் முதல்வன் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் துறைகளுக்கு இடையே இன்டர் டிசிபிளினரி என்ற புதிய பாடத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் ஆணையிட்டு இருக்கிறார்.
நிதியுதவி கேட்கவில்லை
அந்த காலத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் கல்வி அறிவு பெற முடியாமலும் பள்ளிக்குள்ளேயே நுழைய முடியாமலும் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமலும் இருந்து ஒரு சமுதாயத்தினர் மட்டுமே கல்வி அறிவு பெற்றனர். அனைத்து சமுதாயத்தினரும் ஆண்களும் பெண்களும் கல்வி அறிவு பெற வேண்டுமென்பது தான் திராவிடம் மாடல். பிரதமரிடம் நிதி அளிக்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை, முதலமைச்சர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தான் அன்பாக கேட்டுக் கொண்டேன், அதனையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
மொழிக்கொள்கை
மத்திய அரசு நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்காக உயர்கல்விக்கு ரூ.6,664 கோடியை வழங்கியதாக அவர் கூறுகிறார். தமிழ்நாடு அரசு மட்டும் ஒரு ஆண்டில் உயர் கல்விக்கு செலவு செய்த தொகை ரூ.5,666 கோடி. இதுபோன்று கல்விக்கு அதிகளவு செலவு செய்து வருகிறோம். மொழிக் கொள்கையில் சுதந்திரமாக செயல்பட விடுமாறு நான் கேட்டேன். பிரதமரிடம் நான் நிதி உதவி கேட்கவில்லை என்பதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும்.
கொச்சைப்படுத்துகிறார்
அடித்தட்டு மக்களுக்கும் பயன்பெற வேண்டும் என்று உழைப்பது தான் இந்த இயக்கம். திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகுதான் இந்தியாவில் தமிழகத்தில் அதிகபட்சமாக 53 சதவீதம் பேர் உயர்கல்வி பெறும் நிலை ஏற்பட்டது. இதனை அண்ணாமலை கொச்சைப்படுத்துவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எல்.முருகனைப் போன்று பெரிய பதவிகளுக்கு அவரும் ஆசைப்படலாம்." என கூறினார்.