சிவி சண்முகமே வாரிசு அரசியலில் வந்தவர்.. உதயநிதியை பேச எந்த தகுதியுமில்லை.. பொன்முடி எச்சரிக்கை!
விழுப்புரம்: உதயநிதி ஸ்டாலின் தனது கால்தூசுக்கு சமம் என்று பேசியுள்ள அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகத்திற்கு அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் உதயநிதி பற்றி பேசுவதற்கு சிவி சண்முகத்திற்கு எந்த தகுதியும் இல்லையென்றும், சிவி சண்முகமே வாரிசு அரசியல் மூலம் வந்தவர் தான் என்று பொன்முடி ஆவேசமாக தெரிவித்துள்ளார். அதேபோல், யாரையும் மதிக்காமல் செயல்படும் சிவி சண்முகத்திற்கு திமுக சார்பில் தக்க பதிலடி வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.,
விழுப்புரம் அருகே அத்தியூர் திருவாதியில் மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மக்களுக்கு நலத்தட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி ஏற்பாட்டின் பேரில் 300 பேருக்கு அரிசி, வேட்டி, சேவைகள் வழங்கப்பட்டன.
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
உதயநிதி இப்போது தானே வந்தாரு? நேரடியாக கோவைக்கே பிளைட் ஏறும் டெல்லி
சிவி சண்முகத்திற்கு எச்சரிக்கை
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக உள்ள உதயநிதியை தனது கால் தூசிக்கு சமம் என்று அதிமுகவின் சிவி சண்முகம் பேசி இருக்க கூடாது. அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பேச வேண்டும் என்று பேச கூடாது. முதலில் ஓ பன்னீர் செல்வம் பக்கம் இருந்துவிட்டு பின்னர், எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்த சிவி சண்முகம், அரசியலில் உதயநிதியை பற்றி பேச தகுதியில்லை.
சிவி சண்முகம் யார் தெரியுமா?
பெரியார், அண்ணா, கருணாநிதி, முக ஸ்டாலின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் திமுகவினரை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டாம். அரசியலில் ஈடுபாடு இருந்தால் திமுகவில் வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. 10 சதவிகிதம் வாரிசுகள் திமுகவில் அரசியலில் இருப்பதில் தவறில்லை. உதயநிதியை தனது கால்தூசுக்கு சமம் என்று சொல்வதை சிவி சண்முகம் நிறுத்திக் கொள்ள வேண்டும். சிவி சண்முகத்தின் தந்தை, எல்ஜிஆர் ஆட்சி காலத்தில் அதிமுகவில் முக்கிய பொறுப்பாளராகவும், எம்பி-யாகவும் இருந்தவர்.
வாரிசு அரசியல்
அப்படி பார்த்தால், சிவி சண்முகமே வாரிசு தான். ஊரை ஏமாற்றிவிட்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் அமைந்திருக்கும் சிவி சண்முகம், தன்னுடன் இருந்த லட்சுமணனை கூட ஒன்றாக வைத்திருக்க தெரியாத நபர். யாரையும் மதிக்க தெரியாத சிவி சண்முகத்திற்கு, விரைவில் விழுப்புரம் மாவட்ட திமுக பதில் சொல்ல வேண்டிய வகையில் பதில் சொல்லும் என்று எச்சரித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தொடர்ந்து, உதயநிதியை ஏன் இவ்வளவு வேகமாக அமைச்சராக்க வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால் ஆட்சியமைத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னரே, அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நான் அரசியலில் நுழைந்து முதல் வெற்றியை பெற்றபோதே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எனக்கு அமைச்சர் பதவியை கொடுத்தார். ஆனால் உதயநிதிக்கு தாமதமாகவே பதவி கிடைத்துள்ளது. உதயநிதியை சிறு வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுபவர். இளைஞர்களிடம் அன்பாக பழகக் கூடியவர்.
தேர்தல் வெற்றிக்கான காரணம்
2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அதிக வெற்றிகளை பெற்றதற்கும், 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் எல்லோரும் வெற்றிபெற்றோமென்றால் உதயநிதியின் பிரச்சாரமே முக்கிய காரணம். இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தவருக்கு முதலிலேயே அமைச்சர் பதவி வழங்கி இருக்க வேண்டும். ஒன்றரை ஆண்டு தாமதமாகிவிட்டது என்று தெரிவித்தார்.