Miss Koovagam 2026: கோலாகலமாக நடந்த மிஸ் கூவாகம் அழகி போட்டி! கோவை திருநங்கைக்கு முதல் பரிசு!
விழுப்புரம்: திருநங்கைகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் 'மிஸ் கூவாகம் - 2026' அழகிப் போட்டி விழுப்புரம் நகராட்சி திடலில் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டது யார் தெரியுமா?
தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இப்போட்டியில், கோவையைச் சேர்ந்த சூர்யா முதலிடத்தைப் பிடித்து 'மிஸ் கூவாகம்' பட்டத்தைச் பெற்றார். மலேசியாவின் நிஷா இரண்டாம் இடத்தையும், புதுச்சேரியின் அனன்யா மூன்றாம் இடத்தையும் தட்டிச் சென்றனர்.

விழாவை ஆதினங்கள் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கினர். விழுப்புரம் மாவட்டத் தலைவி விமலா அனைவரையும் வரவேற்றார். மறைந்த மூத்த திருநங்கை ராதா அம்மாளுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, அவரது சமூகப் பணிக்கு மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து, திருநங்கைகள் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. பாடகர் வேல்முருகன் பாடல்களைப் பாட, மேடை மற்றும் அரங்கு முழுக்கத் திரண்டிருந்த திருநங்கைகள் ஆரவாரத்துடன் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். அரசுப் பணி உட்பட பல்வேறு துறைகளில் சாதித்த திருநங்கைகள், இளம் சாதனையாளர்களுக்கு நடிகர் மகேந்திரன், நடிகை ஷனம் ஷெட்டி உள்ளிட்டோர் விருதுகள் வழங்கி கெளரவித்தனர்.
'மிஸ் கூவாகம்' போட்டி 15 திருநங்கைகளின் பங்கேற்புடன் ஆரம்பமானது. பாரம்பரிய பட்டுப் புடவைகள் முதல் நவீன ஆடைகள் வரை கண்கவர் உடைகளில், தலையில் பூச்சூடி, நெற்றிச்சுட்டி மின்ன அவர்கள் ஒய்யாரமாக வலம் வந்தனர். இவர்களில் ஏழு பேர் இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகி, நடுவர்கள் எழுப்பிய சமூகம் சார்ந்த கேள்விகளுக்குத் திறம்படப் பதிலளித்தனர். சிறப்பாகப் பதிலளித்த மூன்று பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் முன்னதாகப் பேசிய மேலமங்கலம் சுவாமிகள் மற்றும் சைலாபுரி திருமடத்தின் ஆதினம், "சமுதாயத்தில் திருநங்கைகள் மீதான பார்வை முன்பு மாறுபட்டு இருந்தது. இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. திருநங்கைகளின் வாழ்க்கைத்தரத்தை குருமார்கள் மாற்றி இருக்கின்றனர்.
இவர்களை கீழ் நிலையில் இருந்து, உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் வாழ்க்கைத்தரத்தை இறை நெறிப்படுத்தி, ஒழுங்கு நெறிப்படுத்தி வாழ வேண்டும்.உங்களுக்கு பேரும், புகழும் கிடைக்க வாழ்த்துகள்" என்று தெரிவித்தனர்.
முதல் இடத்தைப் பிடித்த கோவையைச் சேர்ந்த சூர்யாவுக்கு ரூ.51 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. மலேசியாவைச் சேர்ந்த நிஷாவுக்கு ரூ.25 ஆயிரம், புதுச்சேரியின் அனன்யாவுக்கு ரூ.11 ஆயிரம் பரிசாகக் கிடைத்தன. மூன்று வெற்றியாளர்களுக்கும் கிரீடங்களையும் பரிசுத் தொகையையும் நடிகர்கள் பாலா, மகேந்திரன், நடிகை ஷனம் வழங்கினர்.

வெற்றி பெற்ற சூர்யாவை, இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்த நிஷாவும், அனன்யாவும் முத்தமிட்டுப் பாசத்தைப் பகிர்ந்துகொண்டது ஒரு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
முன்னதாக, வேலூரைச் சேர்ந்த பூஜாஶ்ரீ உள்ளிட்ட பத்து திருநங்கைகளுக்கு நடிகர் கே.ஒய்.பி. பாலா நிதியுதவி வழங்கினார். திருநங்கைகளின் கூட்டமைப்புத் தலைவர் மோகனாம்பாள், துணைத் தலைவர் நூரி, விழுப்புரம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஜனகராஜ் உள்ளிட்டப் பல முக்கியப் பிரமுகர்கள் விழாவில் பங்கேற்று திருநங்கைகளை வாழ்த்திப் பேசினர்.
தமிழகத்துடன் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான திருநங்கைகள், பொதுமக்கள், இளைஞர்களும் இந்த மாபெரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications