மாலையில் திடீரென வாக்குச்சாவடியில் குவிந்த 1000 பேர்.. மரக்காணம் அருகே பரபரப்பு.. என்ன நடந்தது!
விழுப்புரம்: மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராம மக்கள் காலையில் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், திடீரென மாலை நேரத்தில் 1000க்கும் மேற்பட்டோர் வாக்குச்சாவடியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுக்க மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட பல மாநிலங்களில் இருந்து மொத்தம் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதிகாலை முதலே பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். குறிப்பாக வழக்கம் போல நகர்ப்புறத்தை காட்டிலும் கிராமப்புறங்களில் பொதுமக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.
புறக்கணிப்பு: இருப்பினும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த மக்கள் காலை முதல் யாரும் வாக்களிக்க வரவில்லை. அங்குள்ள பாரம்பரிய திரௌபதி அம்மன் கோயிலில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சுமார் 7 ஆண்டுகளாக கோயில் திருவிழா நடக்கவில்லை. இரு தரப்பிற்கும் இடையே இருக்கும் பிரச்சினையால் இந்த கோயில் விழாவுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தாண்டும் கோயில் திருவிழா நடக்கவில்லை.. இந்தாண்டு கோயில் விழாவை நடத்தவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் என்று அந்த கிராம மக்கள் 20 நாட்களுக்கு முன்பே அறிவித்தனர். மேலும், வீடுகளில் கருப்புக் கொடியையும் கட்டினர். இதன் காரணமாகவே இன்று காலை பொதுமக்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை.
சீல் வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்! அடுத்துதான் முக்கியம்! சிசிடிவி + 3 அடுக்கு பாதுகாப்பு
நடுக்குப்பம் மக்கள்: நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு அரசு அதிகாரிகள் வாக்குப்பதிவு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். இருப்பினும், இந்த வாக்குச்சாவடி மையத்திற்கு அரசியல் கட்சி முகவர்கள் கூட செல்லவில்லை. காலை வாக்குப்பதிவு தொடங்கிய போதிலும் பொதுமக்கள் யாரும் வரவில்லை. இதனால் அங்கு வெறிச்சோடிய நிலையே காணப்பட்டது.
இது குறித்த தகவல் கிடைத்த உடன் சம்பந்தப்பட்ட கிராம மக்களுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. திண்டிவனம் சப் கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போலீசாரும் கூட அங்கு பேச்சுவார்த்தை நடத்தினர். லோக்சபா தேர்தல் முடிந்த உடனேயே அமைதி குழு ஒன்று அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர். பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், பொதுமக்கள் வாக்களிக்க வர தொடங்கினர்.
குவிந்த மக்கள்: பிறகு 4-4.30 மணி அளவில் தான் மக்கள் வவர தொடங்கினர். இதன் காரணமாக வாக்குப்பதிவு முடியும் தருவாயில் பலர் குவிந்தனர். அந்த வாக்குச்சாவடி ஏற்கனவே பதற்றமான வாக்குச்சாவடியாக அறிவிக்கப்பட்டு இருந்ததால், அங்கு போலீசார், துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
என்னாச்சு: வாக்குப்பதிவு முடியும் தருவாயில் அங்கு சுமார் 800க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். பேச்சுவார்த்தை சுமுகமான முடிவுக்கு வந்ததாக தகவல் கிடைத்தவுடன் மக்கள் சாரைசாரையாக வர தொடங்கிவிட்டனர். இதனால் வாக்குப்பதிவு முடியும் நேரமான 6 மணி வரை பொதுமக்கள் குவிந்தனர். திடீரென மாலை நேரத்தில் இந்தளவுக்கு மக்கள் குவிந்ததால் அதிகாரிகள் சற்று திணறினர்.
கோயில் திருவிழாவை நடத்த முடியவில்லை என்ற மன வருத்தம் காரணமாகவே தேர்தலை புறக்கணித்ததாகவும் இப்போது அதிகாரிகள் உறுதி அளித்ததால் வாக்களிக்க வந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
மாலை 6 மணிக்குள் வந்த அனைவருக்கும் டோக்கன் கொடுக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். இதனால் அங்கு வாாக்குச்சாவடியில் மக்கள் டோக்கன் பெற்று வரிசையில் நின்று வருகிறார்கள். மாலையில் இந்தளவுக்கு மக்கள் குவிந்து இருப்பதால் இந்த வாக்குச்சாவடியில் மட்டும் வாக்குப்பதிவு முடிக்க தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications