பொன்முடி கேஸில் நெருங்குது கிளைமேக்ஸ்? செம்மண் குவாரி வழக்கில் இன்று விசாரணை.. பரபரக்கும் விழுப்புரம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கின் விசாரணை இன்று அதாவது 11ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது. இது திமுக உள்ளிட்ட அரசியல் கட்சி வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
கடந்த 2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் பொன்முடி அமைச்சராக இருந்தபோது, சட்டவிரோதமாக மண் எடுத்ததாக புகார் கூறப்பட்டது.. பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி மற்றும் உறவினர்கள், விழுப்புரம் மாவட்டம் வானுார் தாலுகா, பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் சட்டவிரோதமாகவும், அளவுக்கு அதிகமாகவும், மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ. 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்திவிட்டதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மொத்தம் 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கு பதிந்தனர். இதனை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இந்த வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில், இப்போது வரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில், 30 பேர் அரசு தரப்பிற்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
கடந்த மாதம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயச்சந்திரன், கோபிநாதன், சதானந்தன் ஆகிய 3 பேர் நேரில் ஆஜரானார்கள். ஆனால், பொன்முடி, கவுதமசிகாமணி, கோதகுமார், ராஜமகேந்திரன் ஆகியோர் மட்டும் ஆஜராகவில்லை.
இவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து திமுக வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர்.. அதேபோல, இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி (பொறுப்பு) இளவரசன், விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அந்தவகையில், இன்றைய தினம் பொன்முடி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications