உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டர் மீது அரசு பஸ் மோதல்- 3 பேர் பலி
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளர்கள் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வசந்தகுமார் (25), பழனிமலை மனைவி நாவலேரி (45), மதிவாணன் மனைவி ரேவதி (32), நாகராஜ் (45), மகேஸ்வரி (30) ஆவர்.
கட்டடத் தொழிலாளர்களான இவர்கள் நேற்று வேலைக்காக செங்குறிச்சிக்கு சென்றனர். பின்னர் அங்கு வேலை முடிந்ததும் கலவை எந்திரம் இணைக்கப்பட்ட டிராக்டரில் அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.
டிராக்டரை திருநாவலூரை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் ஓட்டினார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் ஆற்று பாலத்தில் அந்த டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.
மண் அள்ளும்போது 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்... 2 பெண்கள் பலி... நாமக்கல்லில் பரிதாபம்!
இதில் டிராக்டரும் கலவை இயந்திரமும் முற்றிலும் நசுங்கி போனது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த வசந்தகுமார், நாவலேரி ஆகிய இருவரும் உடல் நசுங்கி பலியாகிவிட்டனர். மேலும் டிராக்டரில் வந்த வெற்றிவேல், நாகராஜ், ரேவதி, மகேஸ்வரி, மற்றும் பேருந்து பயணம் செய்த சுப்பிரமணி (67), கார்த்தி மணி (65), முத்து (45) ஆகிய 7 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டனர். அதில் விபத்தில் காயமடைந்த ரேவதி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்த விபத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து மாற்று பாதையில் வாகனங்களை போலீஸார் அனுப்பி வைத்தனர்.