வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வெளியே வர முடியும்.. விழுப்புரம் மக்களுக்கு புது உத்தரவு
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் இனி வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த 51 வயதான தலைமை ஆசிரியர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் டெல்லியை சேர்ந்த நிதின் ஷர்மா என்ற இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், கடந்த 7 ஆம் தேதி மருத்துவர்களின் அலட்சியத்தால் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விழுப்புரம் மாவட்ட போலீஸார் 7 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
அமேசான் காட்டுக்குள் நுழைந்து.. 15 வயது சிறுவனின் உயிரை குடித்த கொரோனா.. பெரும் ஷாக்கில் பிரேசில்
விழுப்புரத்தில் பரவுகிறது
இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபா்களிடமிருந்து, அவா்களது குடும்பத்தினருக்கு பரவி வருவது பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது. இவா்களிடமிருந்து மற்றவா்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால், இந்த நோய் சமூகத் தொற்றாக மாறும் சூழல் நிலவுகிறது.
தீவிர தடுப்பு நடவடிக்கை
இதனால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. விழுப்புரத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி கூடுவதைத் தவிா்க்கும் வகையில், பாகா்ஷா வீதியில் இயங்கி வந்த காய்கறி சந்தை புதிய பேருந்து நிலையத்துக்கும், நேருஜி சாலையில் இயங்கி வந்த உழவா் சந்தை நகராட்சி மைதானத்துக்கும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
இடமாற்றம்
அதனைத் தொடா்ந்து, எம்.ஜி. சாலையில் இயங்கி வந்த இறைச்சிக் கடைகள் நகராட்சித் திடலுக்கு மாற்றம் செய்யப்பட்டு, விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை என்றாலும், சாலைகளில் பொதுமக்கள் கூட்டம் குறையவில்லை. இந்நிலையில் பொதுமக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் விழுப்புரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட 35 வார்டுகளை ஆறு பிரிவாகப் பிரித்துள்ளனர்.
வாரம் ஒரு முறை
அதில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் வகையில் புதிய திட்டம் வரும் திங்கட்கிழமை 13 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதன்படி திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு நீலம், ஆரஞ்சு, பச்சை, மஞ்சள், ஊதா, வெள்ளை உள்ளிட்ட ஆறு வண்ணங்களில் அட்டைகள் அளிக்கப்பட உள்ளது.
அடையாள அட்டை
அந்த அட்டைகளை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் வீடுகளை விட்டு வெளியே வந்து, தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும். இதனை மீறி மற்ற நாட்களில் வெளியே வருபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெளியே வர தடை
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள 5,6,7,8,9,12,13 ஆகிய ஏழு வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த புதிய அறிவிப்பு மூலம் வரும் 14 ஆம் தேதி பிறகு மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது.