விழுப்புரத்தில் வாகனங்களை மறித்து.. அரசு பேருந்தில் ஏறி கோஷமிட்ட பாமகவினர்.. ஸ்தம்பித்த போக்குவரத்து
விழுப்புரம்: வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்காத திமுக அரசைக் கண்டித்து, அன்புமணி தலைமையில் பாமகவினர் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக ஆயிரக்கணக்கான பாமகவினர் திரண்ட நிலையில், அவர்கள் வாகனங்களை மறித்தும்.. அரசுப் பேருந்தின் மீது ஏறி கொடியசைத்து கோஷமிட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழக அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாமகவில் மட்டும் உள்கட்சி பிரச்சனை தீவிரமடைநது கொண்டிருக்கிறது. ராமதாஸ் தரப்பில் மகளிர் மாநாடு நடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகஸ்ட் 10 ஆம் தேதி பூம்புகாரில் இந்த மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அன்புமணி சார்பில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மறுப்பதை கண்டித்து இன்று விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி மைதானத்தில் பாமக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அன்புமணி ராமதாஸ் மற்றும் ஆயிரக்கணக்கான பாமகவினர் கலந்து கொண்டனர்.
திமுகவை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பாமகவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திமுகவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. நூற்றுக்கணக்கான வாகனங்கள் திரண்டதால் விழுப்புரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கைகளில் பாமக மற்றும் வன்னியர் சங்க கொடியுடன் ஆரவாரத்துடன் வருகை புரிந்தனர். ஏற்கனவே விழுப்புரம் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்ட நிலையில், வாகனங்கள் அதிகமாக வந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்து பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். சிலர் தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி கொடியை அசைத்து, கோஷமிட்டனர். இதனால் வாகனங்கள் குறித்த நேரத்த நேரத்தில் செல்ல முடியவில்லை.
இன்னும் சில பாமக தொண்டர்கள் அரசுப் பேருந்து மற்றும் பொது மக்களின் வாகனங்களை மறித்து கோஷம் எழுப்பினர். முக்கியமாக மேலும் சில பாமக தொண்டர்கள் அரசு பேருந்தின் மீது ஏறி கொடியசைத்து, நடனமாடி, கோஷம் எழுப்பினார்கள். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications