கடுப்பேத்றார் மை லார்ட்! போதையில் ‘அந்த’ தொந்தரவு.. கொதிக்க கொதிக்க ரசத்தை மூஞ்சியில் ஊற்றிய குப்பு!
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்ததோடு பாலியல் தொந்தரவும் அளித்த கணவன் முகத்தில் சூடான ரசத்தை மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்த நடராஜன் (30) என்பவருக்கு, குப்பம்மாள்(28) என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
செஞ்சியில் தின்பண்டங்களை பேருந்துகளில் சென்று கூலிக்கு விற்பனை செய்து வரும் நடராஜன் அதிகளவில் மதுவிற்கு அடிமை ஆகி உள்ளார். இதனால் தினமும் தான் சம்பாதிப்பதை வீட்டிற்கு எடுத்து வராமல் குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது.
போதையில் பிரச்சினை
இதனால் நடராஜனை அவருடைய மனைவி குப்பம்மாள் கண்டித்ததால் அடிக்கடி பிரச்சினை செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் போதைக்கு அடிமையாகிய நடராஜன் மனைவியைக் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் குப்பம்மாள் கொடுமை தாங்க முடியாததால் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் கணவர் மீது புகார் கொடுத்தார்.
அடித்து துன்புறுத்தல்
இந்த புகாரின் அடிப்படையில் நடராஜனை விசாரணைக்கு அழைத்த செஞ்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மீண்டும் பிரச்சினை செய்தால் காவல் நிலையத்தில் தகவல் கூறும்படி குப்பம்மாளிடம் காவல்துறை கூறிய நிலையில், நடராஜன் மீண்டும் மது போதையில் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.
தற்கொலை முயற்சி
இது தொடர்பாக மீண்டும் காவல் நிலையத்தில் குப்பம்மாள் புகார் தெரிவித்த நிலையில் நடராஜனை போலீசார் மீண்டும் விசாரணைக்கு அழைத்து எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தனது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏற்கனவே நடராஜ் இரண்டு முறை தனது கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
சூடான ரசம்
இந்நிலையில் நேற்று இரவு கணவன் மதுபோதையில் மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மனைவி குப்பம்மாள் சூடான ரசத்தை நடராஜன் முகத்தில் ஊற்றி உள்ளார். இதில் முகம் வெந்த நிலையில், செஞ்சி காவல் நிலையம் முன்பு வந்து மனைவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நிலையில் செஞ்சி போலீசார் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக நடராஜனை அனுமதித்தனர்.