பக்தர்களே.. நாளை சதுரகிரி சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க போறீங்களா? இந்த அறிவிப்பு உங்களுக்காக தான்!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் நாளை பக்தர்கள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்று வரும் நிலையில், கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

சதுரகிரி மலை மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் பக்தர்கள் வழிபாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
மேலும் வனவிலங்கு மற்றும் காட்டாற்று வெள்ள அபாயம் காரணமாக வனத்துறையினர் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே பக்தர்களை மலைக்கு செல்ல அனுமதிக்கின்றனர். சதுரகிரி மலையில் ஓடுகின்ற ஓடைகளும் அங்கு விளைந்திருக்கும் மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் சதுரகிரி மலையின் மீது ஏறி இறங்கும் போது உடலில் உள்ள வியர்வை வெளியேறி மூலிகை கலந்த காற்றுப்படுவதால் பல நோய்கள் குணமாவதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சித்த மருத்துவர் கூட இங்கிருந்து தான் மூலிகைகளை பறித்துச் செல்கின்றனர்.
நான்கு திசைகளிலும் நான்கு மலைகள் என மொத்தம் 16 மலைகள் சமமாக சதுர வடிவில் அமைந்திருப்பதால் இந்த மலை சதுரகிரி மலை என பெயர் பெற்றது. இந்த கோவிலில் ஆடி அமாவாசை உள்ளிட்ட முக்கிய விரத தினங்கள், சித்ரா பௌர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகியவற்றில் பக்தர்கள் வழிபட அதிக அளவில் திரள்வது வழக்கம்.
கடந்த காலங்களில் இரவு நேரங்களில் சதுரகிரியில் பக்தர்கள் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. பக்தர்கள் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த வகையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதையில் உள்ள நீரோடைகளில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்திருப்பதால் அங்கு பக்தர்கள் இரவில் தங்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நாட்களில் திடீரென காட்டாற்று வெள்ளம் அதிகமாகி பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன.
இந்த நிலையில், நாளை சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரசித்தி பெற்ற கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்று வரும் நிலையில் அங்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக பக்தர்களை அனுமதித்தால், காட்டாற்று வெள்ளம் ஏற்படும் அபாயத்தால் பக்தர்கள் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. இதன் காரணமாக சதுரகிரி மலைக் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவதை தவிர்க்க வேண்டுமெனவும், வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications