பிரதோஷம்... வைகாசி பவுர்ணமி...சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசித்தால் இவ்வளவு நன்மைகளா?
வைகாசி வளர்பிறை பிரதோஷம், வைகாசி விசாகம் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்: வளர்பிறை பிரதோஷம் மற்றும் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சஞ்சீவிகிரி. இம்மலையே சதுரகிரி என்றனர் முன்னோர்கள். மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர்.
சித்திரை மாத பிரதோஷம்... அமாவாசை...மே 1 வரை சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
மூலிகை வனம் சதுரகிரி
காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள்.
செல்வம் செழிக்கும்
இந்த மலையில் உள்ள தாணிப்பாறை கணேசன், ராஜகாளி அம்மன், பேச்சி அம்மன் மூவரும் எப்படிப்பட்ட பேய் பிசாசுகளையும் விரட்டும் ஆற்றல் கொண்டவர்கள். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இங்குள்ள நீர் நிலைகளில் புனித நீராடி இறைவனை வணங்குவது மிகவும் புண்ணியம் என்கிறது நாடி.
எட்டு ஆடி அமாவாசை தொடர்ந்து வனதுர்க்கைக்கும் சங்கர நாராயண லிங்கமான இரட்டை லிங்கத்திற்கும், பிலாவடி கருப்பசாமிக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், செல்வம் கொழிக்கும், தொழில் விருத்தி அடையும்.
நோய்கள் நீங்கும்
வம்சாவளியாக வரக்கூடிய சர்க்கரை நோய் கண்டிப்பாக குணம் ஆவதுடன், அந்த வம்சத்தினருக்கே இதய நோய், காமாலை போன்ற கொடிய நோய்கள் பாதிக்காது என்கிறார், அகஸ்தியர். சதுரகிரி சென்று வந்தால் உடல் நோய் மட்டுமல்ல மன அழுத்தம், மன பாரம் கூட நீங்குகிறது என்பது இந்த கோவிலுக்கு சென்று வந்தவர்களின் அனுபவம்.
பக்தர்களுக்கு அனுமதி
இன்று வளர்பிறை பிரதோஷம், நாளை சிவராத்திரி மற்றும் 15ஆம் தேதி வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 16ஆம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைகாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு வழக்கத்தைவிட அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வைகாசி பவுர்ணமி தினம் வைகாசி விசாகத்திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
என்னென்ன கட்டுப்பாடுகள்
பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும் மலையேற அனுமதி இல்லை. காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 4 நாட்களில் மழை பெய்ய வாய்ப்புகள் இருந்தால் அன்றைய தினம் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ளன.