"பூரண மதுவிலக்கு" தேர்தல் அறிக்கையில் திமுக கூறவில்லையே.. கனிமொழி கொடுத்த பதில்!
பூரண மதுவிலக்கு என்று திமுக கூறவில்லை என கனிமொழி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்: பூரண மதுவிலக்கு என்று தேர்தல் வாக்குறுதியில் கூறவில்லை என்றும், மது விற்பனையை குறைப்பதாக மட்டுமே திமுக கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக இணைந்து செயல்பட்டாலும், திமுக கூட்டணியின் வெற்றி உறுதியானது என்றும் கனிமொழி கூறியுள்ளார்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசுத் துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டது.
அப்போது டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாயிடும் பணியை சிறப்பாக மேற்கொண்டதாக கூறி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மேற்பார்வையாளர் விற்பனையாளர் என நான்கு பேருக்கு பாராட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்! கனிமொழி தந்த ஊக்கம்! நெகிழ்ந்து போன மாற்றுத்திறனாளி மாணவி!
டாஸ்மாக் ஊழியருக்கு பாராட்டு
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், குடியரசு நாளில் ஒருபுறம் சென்னையில் கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் விருதை முதலமைச்சர் வழங்குகிறார். மறுபுறம் மதுவிற்றவர்களுக்கு கரூர் ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் வழங்குகிறார்.
தமிழ்நாடு எங்கே போகிறது
இது என்ன முரண்பாடு? தமிழ்நாடு எங்கே போகிறது? டாஸ்மாக் மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலிறுத்தினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது.
விருதுநகரில் கனிமொழி
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில் தர்மதுரை திரைப்பட புகழ் தப்பாட்ட கலைஞர் வேலு ஆசான் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
கனிமொழி பேட்டி
இதனைத் தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றிபெறும். காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதிமுக பல திசைகளில் பிரிந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதில் சிலர் ஆதாயம் தேட நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பூரண மதுவிலக்கு
அதேபோல் அதிமுகவில் எல்லோரும் இணைந்து பணி செய்தாலும், இல்லையென்றாலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து மதுவிலக்கு பற்றிய கேள்விக்கு, பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று தேர்தலின் போது சொல்லவில்லை. தேர்தல் வாக்குறுதியும் அளிக்கவில்லை. மது விற்பனையை குறைப்பதாகவே கூறினோம் என்று தெரிவித்தார்.