சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி! தலா ரூ 4 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து நிகழ்ந்ததில் 6 பேர் பலியாகிவிட்ட சோக சம்பவம் நடந்தேறியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அப்பைநாயக்கன்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்குள்ள 4 அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தன.

இந்த நிலையில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் 4 அறைகளும் தரைமட்டமாகிவிட்டன. இந்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் பலியாகிவிட்டனர். இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து மீட்பு படையினர் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவர்களை தேடி வருகிறார்கள்.
வேதி பொருட்கள் கலவையின் போது விபத்து நேர்ந்ததாகவும் விசாரணைக்கு பிறகே முழு தகவலும் தெரியவரும் என்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் எஸ்.பி. அரவிந்தன் ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முகமது சுதீனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 1 லட்சம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications