நம்பர் 1 மாநிலம்.. இபிஎஸ் ஆட்சியில் நடந்தது! விளம்பர வெளிச்சத்தில் திமுக அரசு! சீறிய ஆர்பி உதயகுமார்
விருதுநகர் : திமுக அரசு விளம்பர வெளிச்சத்தில் தான் செயல்படுகிறது எனவும், இன்றைய திமுகவினர் அவர்களின் உழைப்பினாலும் திட்டங்களாலும் தான் தமிழகம் முதலிடத்தில் இருப்பது போல் ஒரு தோற்றத்தை பத்திரிகைகள் மூலம் உருவாக்க பார்க்கிறார்கள் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரபல ஆங்கில நாளிதழான ' இந்தியா டுடே வெளியிட்ட சிறந்த மாநிலங்கள் தரவரிசைப் பட்டியலில் தமிழகம் முதல் இடம் பிடித்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருப்பதாக பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக சிறந்த செயல்பாடு பட்டியலில் தமிழகம் முதல் இடத்தை பிடித்து அசத்தி உள்ளது. மொத்தமுள்ள 2080 புள்ளிகளில் தமிழகம் 1,321.5 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில், இமாச்சலப்பிரதேசம், கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

தமிழகம் முதலிடம்
இந்தியா டுடே ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் மாநிலங்களின் செயல்பாடு குறித்து ஸ்டேட் ஆப் தி ஸ்டேட்ஸ் என்ற பெயரில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பொருளாதாரம், மருத்துவம், விவசாயம், கல்வி, உள்கட்டமைப்பு வசதி, சட்டம் ஒழுங்கு, சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய பிரிவுகளின் கீழ் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல பிரிவுகளில் இந்தாண்டும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

திமுக அரசு
இந்நிலையில் திமுக அரசு விளம்பர வெளிச்சத்தில் தான் செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுகவின் அம்மா பேரவை சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் உள்ள திருமண விழா நடைபெறவுள்ளது. தனது மகளின் திருமணத்தோடு மேலும் பல ஏழை ஜோடிகளுக்கும் ஆர்பி உதயகுமார் திருமணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை விருதுநகரில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கட்சி நிர்வாகிகளுக்கு இன்று வழங்கினார்.

ஆர்பி உதயகுமார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார்,"ஆவினில் நெய் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பால் விலை உயர்வு சொத்து வரி உயர்வு மின்சார கட்டண உயர்வு விலைவாசி உயர்வு இவற்றை எல்லாம் கண்டித்து அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின் பேரில் பேரூராட்சி மற்றும் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது

ஆவின் நெய் விலை
தற்போது மீண்டும் தமிழகத்தில் ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளதோடு அடுத்த நாளே வெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய ஆங்கில பத்திரிகைகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பாராட்டு செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்று சொன்னால் தமிழகத்தை எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்த போது தொடர்ந்து 4 ஆண்டுகளும் பலதுறைகளில் முதலிடத்தில் இருந்தது.

எடப்பாடி பழனிச்சாமி
பொருளாதாரம் மருத்துவம் கல்வி வேலைவாய்ப்பு உற்பத்திதுறை மற்றும் வேளாண்மை துறை உள்ளிட்ட அனைத்திலும் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு செய்து செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது தொடர்ந்து 4 ஆண்டுகள் தமிழகத்தை முதலிடத்தில் நிலை நிறுத்தி சாதனை படைத்தார். ஆனால் இன்றைய திமுகவினர் அவர்களின் உழைப்பினாலும் திட்டங்களாலும் தான் தமிழகம் முதலிடத்தில் இருப்பது போல் ஒரு தோற்றத்தை பத்திரிகைகள் மூலம் உருவாக்க பார்க்கிறார்கள். ஆகவே திமுக அரசு விளம்பர வெளிச்சத்தில் தான் செயல்படுகிறது" என கடுமையாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications