நண்பர்களுடன் ஆசையாக கண்மாயில் குளிக்க சென்ற மாணவன்... நடந்தது என்ன? சாத்தூர் அருகே சோகம்
விருதுநகர்: சாத்தூர் அருகே குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். கூலி வேலை செய்து வரும் இவரது மகன் சங்கர், சாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் சாத்தூர் ஏழாயிரம்பண்ணை சாலையில் உள்ள கண்மாயில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது சங்கருக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் கண்மாயில் ஒரமாக குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவர் நீரில் மூழ்கி உள்ளார். உடன் குளிக்க சென்ற சிறுவர்கள் உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து ஊர் கிராம மக்கள் உதவியுடன் நீரில் மூழ்கிய மாணவனை பெற்றோர் தேடியுள்ளனர். அங்கு தேடியும் கிடைக்காததால் சாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு அவர்கள் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் இறங்கி தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
எனினும் நீரின் ஆழம் அதிகம் இருந்த காரணத்தாலும் இருள் சூழ்ந்த பகுதி என்பதாலும் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பின் நீரில் மூழ்கிய மாணவனை தீயணைப்பு படையினர் சடலமாக மீட்டனர். பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.