பாஜக கட்டிய எய்ம்ஸ் இதுதான்.. ஒற்றை செங்கல்லை காட்டி கலாய்த்த உதயநிதி.. கூட்டத்தில் குபீர் சிரிப்பலை
விருதுநகர்: பாஜகவும் அதிமுகவும் இணைந்து மதுரையில் கட்டிய எய்மஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்துவிட்டதாகச் செங்கல்லைக் காட்டி உதயநிதி பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
மேலும், தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சித் தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தீவிர பிரசாரம்
ஆட்சியை இழந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த முறை ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் திமுக களமிறங்குகிறது. இதற்காக அக்கட்சியில் ஒரு பெரும் தலைவர்கள் பட்டாளமே தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதி இந்த முறை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். இருப்பினும், தனது தொகுதியைத் தாண்டியும் பல்வேறு இடங்களில் அவர் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கிறார். ஸ்டாலினைப் போல சீரிஸான மோடில் இல்லாமல் கிண்டலும் நக்கலும் கலந்து பேசுவதால் உதயநிதி பேச்சைக் கேட்க ஒரு கூட்டம் உருவாகிவிட்டது.
ஒற்றை செங்கல்
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் இன்று பிரசாரம் செய்த அவர், நேற்று மதுரையில் பிரசாரம் செய்துவிட்டு வரும்போது கையோடு பாஜகவும் அதிமுகவும் இணைந்து கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை எடுத்து வந்துவிட்டேன் என்று கூறி செங்கல் ஒன்றைக் காட்டி, கிண்டல் செய்யும் விதமாகப் பேசியது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
எய்மஸை கையோடு எடுத்து வந்துள்ளேன்
மேலும் அவர் பேசுகையில், "மதுரையில் பாஜகவும் அதிமுகவும் இணைந்து கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை ஞாபகம் இருக்கிறதா? அதை கையோடு எடுத்து வந்துவிட்டேன். இதுதான் அதிமுகவும் பாஜகவும் இணைந்து கட்டிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி. அங்கு ஒரே ஒரு செங்கல் தான் இருந்தது" என்று கூற கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப் பிரதமர் மோடி இரண்டு ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டினார். இருப்பினும் இதுவரை கட்டுமான பணிகள் தொடங்காதது பெரும் விமரிசத்திற்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.