ராதிகா அம்மா மேல எந்த தப்பும் இல்லை! விருதுநகர் தாய்மார்களுக்கும் மகன்தான்.. விஜய பிரபாகரன் ஒரே போடு
விருதுநகர்: விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகாவுக்கு மட்டும் நான் மகனில்லை. இந்த தொகுதி மக்கள் அனைவருக்கும் நான் மகன்தான் என தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என் தந்தையுடன் பயணித்திருந்தாலும் எனக்கு அரசியல் புதிதுதான். தற்போது தேர்தலில் களமிறங்குவது புதுவிதமான அனுபவத்தை தருகிறது.

ஒரு நாள் நான் இந்த இடத்திற்கு வருவேன் என எதிர்பார்த்தேன். ஆனால் இத்தனை சீக்கிரமாக வருவேன் என நான் நினைக்கவில்லை. இது காலத்தின் கட்டாயம். என் அப்பா எப்படி மக்களுக்கு சேவையாற்ற நினைத்தாரோ அதை விட அதிகமாக நான் செய்யவேண்டும் என விரும்புகிறேன்.
என் அப்பா இந்த நேரத்தில் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். என் அப்பா எங்களை விட்டு போய் 100 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். இத்தனை பெரிய பொறுப்பை நான் ஏற்று இருக்கிறேன். அவர்தான் எனக்கு திரையிலும் நிஜத்திலும் ஹீரோ. அவர் இல்லாதது எனக்கு கஷ்டமாக இருக்கிறது.
இருந்தாலும் அதையெல்லாம் நான் வெளியே சொல்லாமல் உள்ளேயே வைத்து குமுறிக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் எங்கள் கட்சிக்காகவும் பாடுபட்ட தொண்டர்களுக்காகவும் நான் இங்கு வந்திருக்கிறேன். நாங்கள் பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். எனவே நிச்சயமாக இதை பேலன்ஸ் செய்து கொண்டு செல்வேன்.
இது கடினமான காலம்தான். ஆனாலும் கேப்டனின் ஆசி, அம்மாவின் ஆசி, புரட்சித் தலைவரின் ஆசிபடி நிச்சயம் நாங்கள் வெல்வோம் என நம்புகிறேன். என் மீது சுமத்தி இருக்கும் பொறுப்பாக நான் இதை பார்க்கவில்லை. சவால்கள் எனக்கு பிடிக்கும். இந்த சவாலில் நான் எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதை பார்க்கிறேன்.
ராதிகா அம்மாவின் மகன் மட்டுமில்லை. விருதுநகரில் உள்ள தாய்மார்கள் அனைவருமே என்னை அவர்களின் மகனாகவே பார்க்கிறார்கள். அவர் என்னை மகன் என சொன்னதில் எந்த தவறும் இல்லை. அவர் என்னை சிறிய வயதிலிருந்து பார்க்கிறார். நானும் அவருடைய மகளும் ஒரே வகுப்பில் படித்தோம்.
எனவே அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை. திட்டமிட்டு செய்யும் யுக்திகள் என எதுவும் இல்லை. என் அப்பா கனவுகளை நனவாக்கவும் அவர் செய்ய இயலாததை செய்யவும்தான் நான் இந்த பொறுப்பை ஏற்றிருக்கிறேன். எய்ம்ஸ், விமான நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவற்றை செய்து விருதுநகரை சிறப்பான தொகுதியாக மாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம். இவ்வாறு தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன: விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரனும் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும் போட்டியிடுகிறார்கள். இதனால் இது நட்சத்திர தொகுதியாக மாறிவிட்டது. இந்த நிலையில் வேட்புமனு தாக்கலுக்கு வந்த ராதிகாவிடம் செய்தியாளர்கள் விஜய பிரபாகரன் குறித்து கேட்டனர்.
அதற்கு அவர் விஜய பிரபாகரன் எனது மகன் போன்றவர். என் மகளுடன் படித்துள்ளார். சின்ன பையன் நல்லாயிருக்கட்டும் என்றார். அது போல் வேட்பு மனுதாக்கலுக்கு சென்ற போது விஜய பிரபாகரனை சரத்குமார் ஆரத்தழுவினார், ராதிகா கைகுலுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications