விருதுநகர் விக்கித்தது.. வாசலில் சிவப்பா? அதிகாலையில் அலறிய அருப்புக்கோட்டை.. விழுந்தடித்து ஓடிய ஜனம்
விருதுநகர்: அருப்புக்கோட்டை உச்சி சுவாமி கோயில் 4வது குறுக்கு தெருவில் நடந்துள்ள இந்த சம்பவம், ஒட்டுமொத்த விருதுநகர் மாவட்டத்தையும் விக்கித்து போக வைத்துள்ளது. அப்படி என்ன நடந்தது?
தற்போது பருவமழை துவங்கிவிட்டது. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்தவகையில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையிலும், கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது.

கனமழை: கனமழை காரணமாக, அருப்புக்கோட்டையின் பல பகுதிகளில், மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்... முக்கிய நகரங்களை தவிர, மற்ற பகுதிகளில், மழை காரணமாக சீக்கிரமாகவே தூங்க போய்விடுகிறார்கள். இதனால், மாலை நேரத்துக்கு மேல், பொதுமக்களின் நடமாட்டம் அவ்வளவாக காணப்படுவதில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், உச்சிசுவாமி கோயிலின் 4வது தெருவில், மொத்த பேரும் பதறிப்போயிருக்கிறார்கள்.. இரவில் அனைவரும் சீக்கிரமாக தூங்கிவிட்டாலும், அதிகாலையில் பெண்கள், வீட்டு வாசலில் கோலம் போடுவதற்காக வெளியே வந்துள்ளனர்.. அப்போது, அங்கிருக்கும் பெரும்பாலான வீடுகளின் வாசல்களில் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்ததை பார்த்து அலறி அடித்து ஓடியிருக்கிறார்கள்..
ரத்த குறியீடு: அதிலும், ஒரு வீட்டில் சுவற்றில், "பி.ஆர் இன்று இரவு" என்று எழுதிவைக்கப்பட்டிருந்ததாம். அந்த ஏரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஆட்டோவிலும் ரத்தக்கறைகள் தெறித்துள்ளது.. இதையெல்லாம் கண்டுதான் கதிகலங்கி போயிருக்கிறார்களாம்.
இப்படித்தான், கடந்த 3 மாதத்திற்கு முன்பும், இந்த தெருவுக்கு பின்பகுதியிலும், இதே போல வீட்டு வாசலில் மட்டும் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்தாம்.. அன்று ஒரு வீட்டில் மட்டும் ரத்தம் காணப்பட்ட நிலையில், இன்று தெருவில் பல வீடுகளில் ரத்தம் தெளிக்கப்பட்டிருப்பதாகவும், ஆட்டோவிலும் ரத்தம் உறைந்திருப்பதால், என்ன நடந்தது? யாருடைய ரத்தம் என தெரியவில்லை என்று அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.
மனித ரத்தம்: இதனால், வீட்டுக்குள் தங்க முடியாமல், அந்த பகுதி மக்கள், தெருவின் மையத்தில் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலறிந்ததும் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வந்து, அந்த தெருவில் பார்வையிட்டனர்.
வீடுகள் முன்பு சிதறி கிடந்தது ஆட்டு ரத்தமா அல்லது மனித ரத்தமா? தெரு முழுக்க எல்லாருடைய வீடுகளிலும் ரத்தம் எப்படி வந்தது? ஏதாவது, ரத்த பூஜை நடந்ததா? பில்லி, சூனியம் மாந்திரீகமா? என்ற விசாரணையும் நடக்கிறது.. சிதறிக்கிடந்த ரத்த மாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்காக அனுப்பியும் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை அருப்புக்கோட்டையில்..!!












Click it and Unblock the Notifications