மழை வருது சார்! ட்விட்டரில் லீவ் கேட்ட மாணவன்! என்ஜாய் பண்ணுங்க.. விருதுநகர் ஆட்சியரின் கூல் பதில்!
விருதுநகர் : கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் விருதுநகரில் விடுமுறை அறிவிக்கப்படுமா என ட்விட்டரில் கேள்வி எழுப்பிய மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் கலகலப்பாக பதில் அளித்து இருக்கிறார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கும் நிலையில் வழக்கத்தை விட தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. பல ஆண்டுகள் இல்லாத வகையில் மழை பதிவு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக மாணவர்கள் பாதிப்படைய கூடாது என்பதற்காக சில மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் திருவாரூர் மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம், தஞ்சை மாவட்டம் மற்றும் சில பகுதிகளில் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர்.

விடுமுறை இல்லை
இந்நிலையில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது ஆனால் காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மழை பெய்யவில்லை இதனை அடுத்து பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன.

விருதுநகர் ஆட்சியர்
இந்த நிலையில் விருதுநகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என ட்விட்டரில் கேள்வி எழுப்பிய மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் கலகலப்பாக பதில் அளித்து இருக்கிறார். "சார் சிவகாசியில் மாலை முதல் மழை வந்த வண்ணம் இருக்கிறது நாளை பள்ளி கல்லூரிக்கு விடுமுறை கிடைக்குமா" என மாணவர் ஒருவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டியிடம் ட்விட்டர் மூலமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

கலகல பதில்
இதற்கு கலகலப்பாக பதில் அளித்துள்ள விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி "இல்லை மாலையில் மழையை ரசித்து விட்டு அடுத்த நாள் காலையில் பள்ளிக்குச் செல்லுங்கள்" என பதில் அளித்து இருக்கிறார் தற்போது மாணவனின் கேள்வியும் ஆட்சியரின் பதிலும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மழைக்காலம் ஆரம்பித்ததில் இருந்தே சமூக வலைதளங்கள் மூலம் மாவட்ட ஆட்சியர்களை மாணவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு விடுமுறை கேட்பதும் அவர்களுக்கு ஆட்சியர்கள் கலகலப்பாக பதில் அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications