விருதுநகரில் சிறுவர்களின் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றும் இளைஞர்கள்.. ஷாக் வீடியோ
விருதுநகர்: விருதுநகரில் வீதியில் செல்லும் சிறுவர்களை அழைத்து வலுக்கட்டாயமாக வாயில் மது ஊற்றும் இளைஞர்களின் கொடூர செயல் குறித்த சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
மது அருந்தும் கலாச்சாரம் கடந்த 10 ஆண்டுகளில் மிக மோசமாக அதிகரித்துள்ளது. குக்கிராமங்களிலும் மது அருந்துவது ஒன்றே சந்தோஷம் என்கிற மனநிலை அதிகரித்துள்ளது. சாலையோரங்கள், காட்டுப்பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மதுபாட்டில்களும், வாட்டர் பாட்டில்களும், தண்ணீர் கிளாஸ்களும் நிறைந்து கிடக்கின்றன.
பொதுவெளியில் மது அருந்துவது என்பது முன்பெல்லாம் அசிங்கமான விஷயமாக பார்க்கப்பட்டது. மது அருந்துபவர்களை சமூகத்தில் ஒதுக்கி வைக்கும் நிகழ்வுகளும் அவர்களை தவறானவர்களாக பார்க்கும் நிகழ்வுகளும் இருந்தது.
ஏழு மாவட்டம் தான்.. எல்லா ஊரிலும் குறைந்தது கொரோனா.. மாவட்ட நிலவரம் பாருங்கள்!
குடிப்பதற்காகவே வாழ்வது
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் சிறுவர்களும் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டனர். அதனால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் பெருகிவிட்டன. பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி குடிநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிப்பதற்கே மொத்த பணத்தையும் செலவழிப்பர்களாக பலர் மாறிவிட்டனர். இதனால் அவர்களின் குடும்பம் வறுமையில் தவிக்கிறது.
கொலைகளுக்கு மதுவும் காரணம்
இதுஒருபுறம் எனில் மது அருந்தும் பழக்கம் அதிகரிப்பால் பாலியல் குற்றங்களும், கொலை குற்றங்களும் அதிகரித்துவிட்டன. பெரும்பாலான கொலை குற்றங்களின் பின்னணியில் மது அருந்தும் பழக்கமும் ஒரு காரணமாக உள்ளது. தமிழகத்தில் எந்த பண்டிகை வந்தாலும் மதுவில் தான் கொண்டாட்டம் என்கிற அளவுக்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இவ்வளவு தூரம் மதுவின் ஆதங்கத்தை பற்றி விவரிக்க காரணம் விருதுநகரில் நடந்த சம்பவம் தான்.
விருதுநகரில் ஷாக்
விருதுநகரில் உள்ள விவேகானந்தர் தெருவின் ஓரத்தில் பத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருக்கிறார்கள். அப்பகுதி வழியே செல்லும் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மதுவை வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றும் சிசிடிவி வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விசாரணை செய்து சிறுவர்களுக்கு மது பழக்கத்தை சிறுவயதிலேயே ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளைஞர்கள் கைது
சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றுகூடி பிறந்தநாள் கொண்டாட்டமாக பொது இடங்களில் வாளால் கேக் வெட்டும் வீடியோவும் விருதுநகரில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டார்கள்.