காளிமுத்து மகனும்.. ஓ.பி.எஸ் மகனும்.. நேருக்கு நேர்.. விருதுநகர் தேர்தல் களத்தில் திடீர் திருப்பம்!
சென்னை: விருதுநகர் லோக்சபா தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகனும் எதிரும் புதிருமாக மோதத் தயாராகி வருவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பட்டாசுத் தொழில் படபடக்கும் விருதுநகர் தொகுதி இப்போது பட்டாசு தொழில் பவுசு இழந்ததால் நமுத்துப் போயுள்ளது. இந்த தொகுதியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதிமுக பொது செயலாளர் வைகோ, திமுகவில் இருந்து ரத்தினவேலு இவர்களையெல்லாம் தோற்கடித்து வெற்றி பெற்றவர் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன். தொகுதிக்கு நன்கு அறிமுகம் இல்லாதவர் மோடியா லேடியா என்ற ஜெயலலிதாவின் கோஷம் ராதாகிருஷ்ணனை கரை சேர்த்தது.

வென்று வந்த ராதாகிருஷ்ணனும் தொகுதிக்கு பெரிதாக எதையும் செய்துவிடவில்லை என்பதால் தொகுதிமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இப்படிப்பட்ட அதிருப்தி நிலவினாலும் கூட 2016- ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விருதுநகர், அருப்புக்கோட்டை தவிர மீதமுள்ள 4 தொகுதிகளையும் அதிமுகவே கைப்பற்றியது. இதில் சிவகாசியில் வென்ற ராஜேந்திர பாலாஜியும் திருமங்கலத்தில் வென்ற ஆர்.பி.உதயகுமாரும் அமைச்சராகிவிட்டனர். இதில் சாத்தூர் தொகுதியில் வென்ற எதிர்கோட்டை சுப்பிரமணியன் தினகரன் அணிக்கு சென்றுவிட்டார் ஆக விருதுநகர் தொகுதியை பொறுத்த மட்டில் அதிமுகவுக்கான வாய்ப்பை மீண்டும் எப்படியும் பெறுவது என்ற முனைப்பில் அதிமுகவினரும் அமமுகவினரும் இப்போதே களப்பணி ஆற்றி வருகின்றனர்.
இழந்த அதிமுக செல்வாக்கை மீட்ட வேண்டும் என்றால் நல்ல பசையுள்ள ஒரு நபரை இங்கு இறக்க வேண்டும் என்று அதிமுக எண்ணுகிறது அதனால் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை களமிறக்க திட்டமிட்டுள்ளனர். ரவீந்திர நாத் களமிறங்கும் பட்சத்தில் மாவடத்தில் உள்ள இரு அமைச்சர்களும் "பெரிய" அளவில் உதவி செய்வார்கள் என்றும் இதனால் தொண்டர்களும் உற்சாகம் குறையாமல் வேலை செய்வார்கள் என்றும் அதிமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.
தேனி தொகுதியில் அமமுகாவில் கடும் பாதிப்பு வரும் அபாயம் இருப்பதால் விருதுநகர் தொகுதியை ஓ.பி.எஸ் தரப்பு குறி வைப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இது போல அமமுகவும் தங்களுக்கு பெரும் வாய்ப்புள்ள தொகுதியாக இந்த தொகுதியை பார்க்கிறது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் கடுமையாக களப்பணியாற்றி வரும் தினகரன் ஒ.பன்னீர் செல்வத்தை தோற்கடிப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்.
அதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் நன்கு அறிமுகமும் செல்வாக்கும் உள்ளவரான முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் பெயரை இந்த தேர்தலில் பயன்படுத்தலாம் என்று எண்ணியுள்ளனர். இதற்காக காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரையை களமிறக்க முடிவு செய்துள்ளனர். இதனால் விருதுநகர் தொகுதியில் இரு வாரிசுகளின் மோதல் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
திமுக கூட்டணியை பொருத்தமட்டில் இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. அப்படி காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படும் பட்சத்தில் முன்னாள் எம்.பி.மாணிக்கம் தாகூர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக விருதுநகரில் வாரிசுப் போர் மூண்டால் அது உச்சகட்ட அனலைப் பரப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications