2 ஆடு, 2 மாடு வைத்துள்ளவருக்கு ஏன் Y பிரிவு பாதுகாப்பு? அண்ணாமலையை சீண்டிய பிரேமலதா
விருதுநகர்: 2 ஆடு 2 மாடுகளை வைத்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதற்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தேமுதிக மாநிலப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்தும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை கண்டித்தும் விருதுநகரில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், "நாட்டில் தற்போது கலாச்சார சீர்கேடு நடந்து கொண்டிருக்கிறது. பெண்கள் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ள வேண்டும். பாலியல் வன்கொடுமை செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையோ அல்லது தூக்கு தண்டனையோ வழங்கப்பட வேண்டும். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கிறார்கள். அது அரசியல் விளையாட்டு. திமுக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத்தர வேண்டும் அல்லது அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நீட் தேர்வு விவகாரத்தை அரசியலாக்கி பொதுமக்கள் மற்றும் மாணவர்களை குழப்பாதீர்கள். 50% வரை சொத்துவரியை உயர்த்தலாம். ஆனால், 150% வரி உயர்வை பொதுமக்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தை விமர்சனம் செய்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக மிரட்டல் விடுத்து உள்ளது.
மக்கள் கட்டும் வரி பணத்தில் அண்ணாமலைக்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பை அளித்து இருக்கிறது. 2 ஆடு, 2 மாடு, 2 பெட்டி வைத்திருப்பவருக்கு எதற்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும். அண்ணாமலைக்கு உண்மையிலேயே துணிச்சல் இருந்தால் Y பிரிவு பாதுகாப்பு வேண்டாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதட்டும்." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications