ஒபிஎஸ் மகனை ஆரத்தி எடுப்பவர்களுக்கு ரூ.500... தேர்தல் ஆணையத்தை எச்சரிக்கும் கே.எஸ்.அழகிரி!
விருதுநகர்: தேனியில் போட்டியிடும் துணை முதல்வர் மகன் ரவீந்திரநாத்தின் தேர்தல் பிரச்சாரத்தில் ஆரத்தி எடுப்பவர்களுக்கு ரூ.500 வழங்குவதை தடுக்காமல் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்ப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
விருதுநகரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்தாகூரை ஆதரித்து பொதுக்கூட்டம் நடந்தது . இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: "கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களில் ஆட்சி பொறுப்பேற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.
ஆனால் மோடி அரசு விவசாய கடன்ளை தள்ளுபடி செய்வது பிரச்னைகளை தீர்க்காது என கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற உடன், விவசாய கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும்.
தேனியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுக்க வைக்கப்படுகிறார்கள். ஆரத்தி எடுக்கும் ஒவ்வொருவருக்கும் ரூ.500 வழங்கப்படுகிறது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்று ஆரத்தி எடுப்பது சட்டப்படி குற்றம். எனவே ஆரத்தி எடுப்பதை தடை செய்ய வேண்டும்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications