அமெரிக்காவில் பரபரப்பு.. விமானத்தில் இருந்து திடீரென கீழே குதித்த நபர்..அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் விமானத்தில் இருந்து திடீரென கீழே குதித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து சால்ட் லேக் நகருக்கு 'யுனைடெட் எக்ஸ்பிரஸ் 5365' விமானம் புறப்பட்டு சென்றது.
பாதுகாப்பு சோதனைகளை முடித்து விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்ததும், ஒடுபாதையை நோக்கி விமானம் சென்றுகொண்டிருந்தது.

கீழே குதித்தார்
அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் விமானத்தின் காக்பிட் கதவை பலமாக தட்டினார். இதனை தொடர்ந்து அந்த நபர் திடீரென விமானத்தின் அவசர கால கதவை திறந்து வெளியே குதித்தார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அறிந்த விமானியும் உடனடியாக விமானத்தை அவசர, அவசரமாக நிறுத்தினார்.

கைது செய்தனர்
விமானத்தில் இருந்து கீழே குதித்த அந்த நபர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அந்த நபரை போலீசார் கைதும் செய்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து மீண்டும் விமான முனையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

என்ன நடந்தது?
அந்த நபர் ஏன் திடீரென விமானத்தில் இருந்து கீழே குதித்தார். விமானத்தின் உள்ளே என்ன நடந்தது? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளுக்கு இதுபோன்று இடையூறு எற்படுவது இந்த வாரத்தில் இது இரண்டாவது முறையாகும்.

3000 சம்பவங்கள்
கடந்த வியாழக்கிழமை ஒரு கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் ஒருவர் தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு ஓடுபாதையில் சென்று விமான நிலையத்துக்குள் நுழைய முயன்றார். போலீசார் உடனடியாக அந்த நபரை மடக்கி பிடித்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. அமெரிக்காவில் விமானத்தில், விமான நிலையங்களில் பயணிகளின் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் இதுபோல் 3000 சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications