இறங்கி வரும் டிரம்ப்? டெல்லியில் இந்தியா -அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை! பாசிட்டிவ்வான முதல் நாள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். இது இருநாடுகள் இடையே வர்த்தக பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் வரி விதிப்புக்கு பிறகு முதல் முறையாக இன்று டெல்லியில் அமெரிக்க பிரதிநிதிகள் மத்திய அரசுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த குழுவின் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறைக்கு 25 சதவீதமும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவைத சுட்டிக்காட்டி 25 சதவீத வரியையும் விதித்தார். இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது.

இதனால் நம் நாடு கோபமாகி உள்ளது. அதுமட்டுமின்றி இத்தகைய வரி விதிப்பு நியாயமற்றது என்று நம் நாடு அமெரிக்காவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியது. ஆனாலும் டிரம்ப் கண்டுக்கொள்ளவில்லை. அதேபோல் டிரம்ப் கூறியும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதையும் நம் நாடு நிறுத்தவில்லை.
இது இருநாடுகள் இடையே பிரச்சனையை பெரிதாக்கி உள்ளது. இது ஒருபுறம் இருக்க இருநாடுகள் சார்பில் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று டெல்லியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. டிரம்பின் வரி விதிப்புக்கு பிறகு இந்தியா - அமெரிக்க பிரதிநிதிகள் இன்று முதல் முறையாக நேரடியாக டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
இதற்காக அமெரிக்க பிரதிநிதிகளின் குழு இந்தியா வந்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க வர்த்தக உதவி பிரதிநிதி பிரண்டன் லிஞ்ச் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை இந்தியா வந்தனர். இவர்கள் இன்று மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மத்திய அரசு சார்பில் வர்த்தக அமைச்சக சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில், ‛‛இந்தியா - அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்த் பேச்சுவார்த்தை நடந்தது. பிரண்டன் லிஞ்ச் தலைமையிலான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக அதிகாரிகள் குழு இந்தியாவுக்கு வந்தது. அவர்கள் வர்த்த துறை சிறப்பு செயலாளர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினருடன் கலந்துரையாடினர்.
இந்தியாவிற்கும், அமெரிக்கவிற்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகத்தின் நீடித்த முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டு அதுதொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதங்கள் நேர்மறையாகவும், எதிர்கால நோக்கத்துடனும் இருந்தன. பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையில் இந்த ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதற்கான முயற்சியை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது. இது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்த பேச்சுவார்த்தை பற்றி இந்திய வர்த்தக அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறுகையில், ‛‛இந்தியா - அமெரிக்கா பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமெரிக்காவின் வர்த்தகம் தொடர்பான டீம் இந்தியா வந்துள்ளது. இந்த குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது'' என்றார்.
மேலும் இந்த சந்திப்பை நம் நாடு பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த சந்திப்பை வெறும் பேச்சுவார்த்தைக்கு மட்டும் பயன்படுத்தாமல் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் வகையில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. இதுபற்றி வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் சுனில் பர்த்வால் கூறுகையில், ‛‛டிப்ளமேட்டிக் அளவில் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஒட்டுமொத்தமாக, வர்த்தக பிரச்சினைகள் தொடர்பாக இரு நாடுகளிலும் நேர்மறையான மனநிலை உள்ளது" என்றார்.
அதுமட்டுமின்றி டிரம்ப் கடந்த மாதம் இந்தியாவை காட்டமாக விமர்சித்தார். அதன்பிறகு நம் நாடு சீனாவுடன் நெருக்கமாக செயல்பட தொடங்கிய நிலையில் டிரம்ப் தனது ஆக்ரோஷத்தை குறைத்து கொண்டார். மேலும் இந்த மாத தொடக்கத்தில் இருந்து டிரம்ப் நம் நாட்டை அரவணைக்கும் தொனியில் பேசி வருகிறார்.
பிரதமர் மோடியை சிறந்த பிரதமர் என்றும், இந்தியா - அமெரிக்கா இடையே சிறப்பான பந்தம் உள்ளது. அதுபற்றி கவலைப்பட வேண்டாம். இருநாடுகள் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.அதன்படி இன்றைய பேச்சுவார்த்தை இருநாடுகள் இடையே சுமூகமாக நடந்துள்ளது. இனி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications