ரிஹன்னா... கிரெட்டா தன்பெர்க்கை தொடர்ந்து... அமெரிக்காவின் பிரபல நிகழ்ச்சியில் விவசாயிகள் போராட்டம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல காமெடி நடிகர் ட்ரெவர் நோவா, தனது டெய்லி ஷோ என்ற நிகழ்ச்சியில் விவசாயிகள் போராட்டம் குறித்து விரிவாகப் பேசியுள்ள வீடியோ, தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்று பேச்சுவார்த்தைகளில் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை.
மத்திய கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமார் 18 மாதங்கள் வரை போராட்டத்தை நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் விவசாய சட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என விவசாயச் சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.
சர்வதேச பிரபலங்கள் ஆதரவு
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகப் பிரபல அமெரிக்கப் பாப் பாடகி ரிஹான்னா முதலில் குரல் கொடுத்தார். விவசாயிகள் போராட்டம் குறித்த செய்தியை தனது ட்விட்டரில் பகிர்ந்த அவர், இது குறித்து நாம் ஏன் பேசுவதில்லை என்றும் கேள்வியெழுப்பியிருந்தார். அவரைத் தொடர்ந்து மியா கலிஃபா, பருவ நிலை போராளி கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்தனர்.
டெய்லி ஷோ
இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல காமெடி நடிகர் ட்ரெவர் நோவா, தனது டெய்லி ஷோ என்ற நிகழ்ச்சியில் விவசாயிகள் போராட்டம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். விவசாய சட்டங்கள் குறித்தும் விவசாயிகள் போராட்டம் குறித்தும் சுமார் எட்டு நிமிடங்கள் வரை அவர் பேசியுள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது. சர்வதேச அளவில் அதிக போராட்டங்கள் நடைபெறும் நிலையில், உலகிலேயே மிகப் பெரிய போராட்டம் தற்போது இந்தியாவில் நடைபெறுவதால் அது குறித்துப் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தனது நிகழ்ச்சியை தொடங்குகிறார்.
விவசாயிகள் போராட்டம்
தொடர்ந்து அவர் பேசுகையில், "பல ஆண்டுகள் பழமையான விவசாய சட்டங்களை அரசு திருத்தியது. அப்போது தான் இந்தப் போராட்டங்கள் தொடங்கின. விவசாய துறையில் தனியார்மயமாக்கலை ஊக்குவிக்கும்போது, எங்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை தங்களுக்குக் கிடைக்காதோ என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்" என்று அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அரசு தரப்பில் கொடுக்கப்பட்டிருந்த விளக்கங்கள் எதுவும் அவரது நிகழ்ச்சியில் காட்டப்படவில்லை.
விவசாயிகள் முக்கியம்
தொடர்ந்து பேசிய ட்ரெவர் நோவா, "விவசாயிகளுக்கு இது ஒரு மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நமக்கு ஒன்றை தெளிவாக கற்றுக் கொடுத்துள்ளது. விவசாயிகளுக்கு நாம் அதிகபட்ச முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். விவசாயிகள் இல்லையென்றால் நாம் இல்லை" என்று அவர் தனது நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
நான்கு ஆண்டுகள் போராட தயார்
இந்க நிகழ்ச்சியில் டெல்லி போராட்ட களத்தில் இருந்து விவசாயி ஒருவர் அளித்திருந்த பேட்டியும் இடம் பெற்றியிருந்தது. அதில் பேசிய விவசாயி, இந்தச் சட்டங்களுக்கு எதிராக அடுத்த நான்கு ஆண்டுகள் வரைகூட தொடர்ந்து போராட தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். போராடும் விவசாயிகளின் மன உறுதி பிரமிப்பை ஏற்படுத்துவதாக ட்ரெவர் நோவா தெரிவித்தார்.