அமெரிக்காவில் மீண்டும் அதிகரித்த கொரோனா.. மக்களே அலர்ட்
நியூயார்க்: ஜோ பைடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அமெரிக்கா முழுவதும் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன.
சுமார் 70 லட்சத்திற்கும் அதிகமான உயிர்களை பலி கொண்ட கொரோனா தொற்று தற்போது மீண்டும் தீவிரமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் சீனாவில் முதன் முதலில் பரவ தொடங்கிய இந்த தொற்று அடுத்தடுத்த ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில், இப்போது வரை 70 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் 6.75 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் காரணமாக இந்த தொற்று மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இப்படி இருக்கையில், தற்போது மீண்டும் தொற்று பரவல் தீவிரமெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது அமெரிக்காவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொற்றால் பாதிக்கப்பட்டதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது என்று உள்ளூர் சுகாதார அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.
அமெரிக்காவின் தெற்கு பகுதிகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் பலருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகையில், "கழிவு நீர் பரிசோதனை மூலம் தொற்று பாதிப்பு எங்கு அதிகமாக இருக்கிறது என்பதை உறுதி செய்ய முடியும். பலருக்கு எந்தவித அறிகுறிகளும் காட்டப்படுவதில்லை. எனவே, தொற்று இல்லை என்று நினைத்துக்கொள்கிறார்கள்.
ஆனால், அறிகுறிகள் இல்லாமல் தொற்று அவர்கள் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை கண்டுபிடிக்கத்தான் கழிவுநீர் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. எங்கள் சோதனையில், கலிபோர்னியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்திருப்பதை கண்டுபிடித்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், பருவகால மாற்றங்கள் காரணமாக தொற்று பரவல் தீவிரமடைவது இயல்புதான் என்றும், எனவே பயப்பட தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் தொற்று பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாட்டின் மொத்த திரை உலகமும் அம்பானி மகன் திருமணத்தில் பங்கேற்றிருந்த நிலையில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மட்டும் பங்கேற்கவில்லை. காரணம் அவர் கொரோானா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2019 தொடங்கி 2021 வரை தொற்று பாதிப்பு தீவிரமாக இருந்தது. இந்த காலத்தில் அதிகம் தொற்று பாதிப்புகளை கொண்ட நாடுகளாக அமெரிக்காவும், இந்தியாவும் இருந்தன. இப்போதும் கூட இந்த இரண்டு நாடுகள் முதல் இரண்டு இடங்களில் இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் தற்போது வரை 11 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் 10.9 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 12 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை, 4.5 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 5.3 லட்சம் மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications