பூமிக்கு காத்திருக்கும் பேராபத்து? 22 அணுகுண்டுகள் அளவு சக்திவாய்ந்த சிறுகோள்..களத்தில் இறங்கிய நாசா
வாஷிங்டன்: பூமியை ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வரும் சிறுகோள் ஒன்று பூமியின் மீது மோத வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சிறுகோளை திசை திருப்பும் வேளையில் நாசா விஞ்ஞானிகள் முழு வீச்சில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
நாம் வாழும் இந்த பூமியும் சரி... சூரியக் குடும்பத்தில் உள்ள பிற கோள்களாக இருந்தாலும் சரி பல்வேறு பேரதிசயங்களை கொண்டது. மனிதனால் கற்பனையால் கூட எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு பேரதிசயங்களை கொண்டதுதான் இந்த பிரபஞ்சம். பூமி எப்படி தோன்றியது.. பூமியை போல பிற கோள்களில் மனிதர்கள் வாழ சாத்தியம் இருக்கிறதா? என தொடர்ந்து ஆய்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

சூரியக்குடும்பத்தில் எப்படி ஒவ்வொரு கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றதோ அது போல சிறுகோள் எனப்படும் ஆஸ்ட்ராய்டுகளும் சூரிய குடும்பத்தின் உட்புற பகுதியில் சூரியனை சுற்றி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.. சூரியனை நீள்வட்டப்பாதைகளில் கோள்கள் சுற்றி வருகின்றன. அதேபோல் சிறுகோள்கள், தூசி, கற்கள், பனிக்கட்டி உள்ளிட்டவை இணைந்த பல்லாயிரக்கணக்கான கலவைகளும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டு இருக்கின்றன.
இவை சூரியனை சுற்றி வருவதற்கான காலம் ஒரே மாதிரியாக இருக்காது. சில வால் நட்சத்திரங்கள் வாழ்நாளில் ஒரே ஒருமுறை கூட சூரியனை சுற்றி வருவது கிடையாது. எளிதாக சொல்வது என்றால் சூரியனை ஒருமுறை சுற்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் கூட எடுத்துக்கொள்ளும் வால் நட்சத்திரங்களும் உள்ளன. சூரியனை சிறுகோள்கள், விண்கற்கள் சுற்றி வருவது போல பூமியின் சுற்றுவட்டப்பாதையிலும் பல சிறு கோள்களும் விண்கற்களும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.
இதுபோன்ற சிறுகோள்கள் பூமியை கடந்து செல்லும் போது அரிதாக பூமியை நோக்கி வருவதுண்டு. இவற்றில் பெரும்பாலும் இவை வளிமண்டலத்திற்கு முன்பே எரிந்து சிதைந்துவிடும். மிக மிக அரிதாக சில விண்கற்கள் பூமியின் மீது மோதுவதுண்டு. இந்த நிலையில், சிறுகோள் ஒன்று பூமி மீது மோதுவதற்கு வாய்ப்பு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த சிறுகோளானது பூமியின் மீது தாக்கினால் 22 அணுகுண்டுகள் வீசியது போன்ற ஒரு பேராபத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
பென்னு என்ற இந்த சிறுகோள் ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நமது பூமியை கடந்து செல்கிறது. எனினும், இந்த சிறுகோள் வரும் 2182 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி பூமியின் மீது மோத வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேல் இருந்தாலும் இந்த சிறுகோளை திசை திருப்பிவிடுவதற்கான வேலையில் நாசா விஞ்ஞானிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான பணி தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
பென்னு என்ற இந்த சிறுகோள் டைனோசர் அழிவுக்கு காரணமாக சிறுகோளின் அளவில் பாதியளவு இருக்கக் கூடும் என்றும் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக உருவானதாகவும் விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவின் நாசா, இந்த சிறுகோளை ஆய்வு செய்ய விண்கலம் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் சிறுகோளில் மாதிரிகளை சேகரித்து நட்ப்பு வாரத்தில் பூமிக்கு திரும்புகிறது. இந்த ஆய்வுகள் மூலம் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications