பூஸ்டர் டோஸ்.. கோவிஷீல்டு போட்டு இருக்கீங்களா? ஓமிக்ரான் கொரோனாவை தடுக்குமா? முக்கிய ஆய்வு முடிவுகள்
வாஷிங்டன்: கோவிஷீல்டு வேக்சின்களை (அஸ்ட்ராஜெனெகா) பூஸ்டர் டோஸ்களாக அளிக்கப்படும்போது அதன் தடுப்பாற்றல் எந்தளவு அதிகரிக்கின்றன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
உலகின் பல்வேறு நாடுகளிலும் ஓமிக்ரான் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் கூட தினசரி வைரஸ் பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதையடுத்து பல்வேறு நாடுகளும் பூஸ்டர் டோஸ் பணிகளைத் தொடங்கியுள்ளன. இந்தியாவிலும் கூட ஜன,10 முதல் முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதைத் தாண்டி இணை நோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது.
கோவிஷீல்டு
இந்நிலையில், கோவிஷீல்டு வேக்சின்களை (அஸ்ட்ராஜெனெகா) பூஸ்டர் டோஸ்களாக அளிக்கப்படும்போது அதன் தடுப்பாற்றல் எந்தளவு அதிகரிக்கின்றன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஸ்ட்ராஜெனெகா வேக்சின்களை பூஸ்டர் டோஸாக அளிக்கும் போது அது ஓமிக்ரான், டெல்டா, ஆல்பா, பீட்டா, காமா உள்ளிட்ட உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிரான ஆன்டிபாடிகளை அதிகரிப்பது முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆன்டிபாடி அதிகரிப்பு
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "முதல் 2 டோஸ் கோவிஷீல்டு அல்லது எதாவது ஒரு mRNA வேக்சின் போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக கோவிஷீல்டு கொடுக்கும் போது, அவர்கள் தடுப்பாற்றல் அதிகரிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை புதிய உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக அதிக தடுப்பாற்றலை தருவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வாளர்கள்
முதல் 2 டோஸ்கள் எந்த கால இடைவெளியில் அளிக்கப்பட்டிருந்தாலும் கூட 3ஆவது பூஸ்டர் டோஸாக கோவிஷீல்டு செலுத்தினால் அவர்கள் தடுப்பாற்றல் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆய்விலும் கூட பைசர் அல்லது மாடர்னா வேக்சின் கொடுக்கப்பட்ட ஒருவருக்கு பூஸ்டர் டோஸாக அஸ்ட்ராஜெனெகா வேக்சின்களாக அளிக்கும்போது ஆன்டிபாடி அளவு அதிகரிப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஓமிக்ரான் பரவல்
ஓமிக்ரான் பாதிப்பு தான் இப்போது உலகின் அனைத்து நாடுகளுக்கும் புதிய தலைவலியாக உருவாகியுள்ளது. பல்வேறு நாடுகளிலும் தினசரி கேஸ்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் மருத்துவ கட்டமைப்பிலும் கூட அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ஓமிக்ரான் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும் கூட, அது டெல்டாவை காட்டிலும் வேகமாகப் பரவுவதால் சுனாமி போன்ற கேஸ்கள் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.